58-வது முறை.. செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோடு 58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், சட்டவிரோத பண பரிமாற்றச் தடை சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார். அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணை இன்று நிறைவடையாததால் வழக்கை வரும் 5 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications