நறுக்குனு 4 பாயிண்ட்..பியூஷ் வகுத்துக் கொடுத்த ப்ளான்! ஓகே சொன்ன எடப்பாடி! அடம் பிடிக்கிறாரே ஓபிஎஸ்!
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பாஜக கூட்டணி பேச்சு வார்த்தைகள் தான் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. எடப்பாடி உடனான இந்த சந்திப்பில் பியூஸ் கோயல் 4 முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களும் இந்த பேச்சு வார்த்தையில் இடம் பெற்றதாக சொல்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி, வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இ
இந்தக் கூட்டத்தில் அதிமுக- பாஜக ஆகிய இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் முக்கியமாக நான்கு வகையான பேச்சுக்கள் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி
முதலில், அதிமுக - பாஜக கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்துள்ளது. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி, மூமுக உள்ளிட்ட கட்சிகளை உறுதியாக கூட்டணியில் இணைத்து வைத்திருக்க எப்படி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகளின் கோரிக்கைகள் என்ன, அவற்றை எப்படி சமாளிப்பது என்பதும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிய கட்சிகளையும் தவறவிடாமல் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தினகரன்
இரண்டாவது முக்கிய அம்சமாக, அதிமுகவில் இருந்து விலகி சென்ற ஓபிஎஸ் மற்றும் தினகரன் போன்ற தலைவர்களை மீண்டும் கூட்டணிக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்கள் சேராத பட்சத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஏற்படும் பாதிப்பு என்ன என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களுக்கு தனி தொகுதி ஒதுக்கீடுகள் வழங்கும் வகையில் பாஜக தன் பங்கில் மாற்றங்கள் செய்யலாம் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியூஷ் கோயல் சந்திப்பு
மூன்றாவது கட்டமாக, தொகுதி பங்கீடு பற்றிய ஆரம்ப நிலை பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வரை கோரப்பட்டதாகவும், அதிமுக தரப்பில் 23 தொகுதிகள் வரை ஒதுக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிமுக, மொத்தம் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டையும் இந்தக் கூட்டத்தில் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படக்கூடிய தொகுதி எண்ணிக்கைகள் பற்றிய ஒரு ஆரம்பப்பட்டியலையும் அதிமுக சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
தவெக தாக்கம்
நான்காவது அம்சமாக, திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளை எதிர்கொள்ளும் அரசியல் திட்டம் பற்றியும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. குறிப்பாக, தவெக தனியாக போட்டியிட்டால், அது சில வாக்குகளை பிரிக்கும் நிலை உருவாகும். இது நேரடியாக திமுகவுக்கு சிரமம் தரும் என்பதால், தவெக தனித்துப் போட்டியிடுவது கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என பாஜக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், தவெக கூட்டணியை வலுப்படுத்தக்கூடிய ஓபிஎஸ், தினகரன், புதிய தமிழகம், தேமுதிக போன்ற கட்சிகளை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் ஆலோசனை நடந்துள்ளது.
அதிமுக கூட்டணி பேச்சு
இந்த அரசியல் ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு கழக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறியிருப்பதும் அரசியல் ரீதியாக கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications