கரூர் சம்பவ வழக்கு.. நீதிபதி பற்றி அவதூறு பரப்பிய தவெக தொண்டர்கள் 4 பேர் அதிரடி கைது!
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணிக்கு மேல் வந்தார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களாக தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் தேடும் பணி துரிதபடுத்தப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் முன்ஜாமீன் கோரிய மனுக்களையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது.
அதோடு சிபிஐ விசாரணை கோரிய மனுக்களையும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.பிக்கள் சியாமளாதேவி மற்றும் விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில், தவெக கட்சியை இது எந்த மாதியான கட்சி இது... அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பு கிடையாது என்று நீதிபதி செந்தில்குமார் கருத்து தெரிவித்தார். கரூர் துயரச் சம்பவத்தை தாண்டி, விஜய் வரும் சாலையில் விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து, தவெகவின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.
நீதிபதிகளின் கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்து கொண்ட தவெக நிர்வாகிகள் பலரும், அந்த நீதிபதிகள் குறித்து அவதூறாக விமர்சித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் சிலர் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியும், தவறான கருத்துகளையும் பரப்பி வந்ததால், காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் தவெக தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட், சென்னையைச் சேர்ந்த சசி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாய மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவதூறு பரப்பி கைதானவர்கள் வெளியிட்ட வீடியோவில், கரூர் சம்பவத்தில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம், அந்த வழக்கு தொடர்பான நீதிபதிகளை விமர்சிக்க வேண்டாம் என்று கூறி உள்ளனர். மேலும் நீதிபதிகளை அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியாகி இருப்பது, தவெக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னதாக, கரூர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவனேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து 3 பேரும் போலீஸ் காவலுடன் அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications