போக்குவரத்து அபராதம் ரத்து என போலி விளம்பரம்.. வாட்ஸ்அப் மெசேஜில் வழிப்பறி! உஷார் மக்களே
சென்னை: போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக அபராதம் விதிக்கப்படும் வழிமுறைகள் தற்போது நவீனமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோசடி கும்பல் ஒன்று, இதனை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.
தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதங்களை விதிப்பதற்கு சில நவீன முறைகளை பின்பற்றி வருகிறது. சிக்னல்களை மீறுவோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், சீட் பெல்ட் அணியாமல் செல்வோர் என விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை நவீன கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராத தொகை வாட்ஸ்அப் வழியாகவோ அல்லது எஸ்எம்ஸ் வழியாகவோ வரும். தற்போது இதே முறை மோசடிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வாகன எண்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே அந்த செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் ஒன்று வரும். அதில், வாகன எண் குறிப்பிடப்பட்டு அது விதி மீறலில் ஈடுபட்டிருக்கிறது என்றும், எனவே உடனடியாக அபராதம் செலுத்தப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் உடனடியாக வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். வாகன எண் சரியாக இருப்பதாலும், வாகன உரிமம் ரத்த செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதாலும் சிலர் அபராதத்தை செலுத்த முன்வருவார்கள். இங்குதான் பிரச்சனை.
வழக்கமாக போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபரராதங்களை செலுத்த அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. இவை ப்ளே ஸ்டோரில் எளிதாக கிடைக்கின்றன. ஆனால், இந்த வாட்ஸ்அப் மெசேஜில் அப்ளிகேஷனின் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அது APK அப்ளிகேஷன்.
அதாவது இது பிளேஸ்டோரில் கிடைக்காது. மாறாக வெப்சைட்களிலிருந்து நேரடியாக மட்டுமே தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷனாகும். இது பாதுகாப்பானது அல்ல. எனவே இதை டவுன்லோடு செய்து பயன்படுத்துவது ஆபத்தானதாகும். இந்த விவரத்தை அறியாத பலரும், உடனே லிங்கை கிளிக் செய்து அதை டவுன்டோடு செய்வார்கள். பின்னர் அதை ஓபன் செய்வார்கள். அப்படி செய்யும்போது செல்போனின் தரவுகளை படிக்க அனுமதி கேட்கும். இதற்கும் ஓகே கொடுத்துவிட்டு, அப்ளிகேஷனுக்குள் சென்றால் அடுத்தடுத்த கட்டங்களில் பணம் பறிபோகும்.
எனவே இப்படியான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதே மோசடி வேறு மாதிரியாகவும் நடக்கும். அதாவது, உங்களுக்கு இவ்வளவு தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையை ரத்து செய்ய அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. எனவே இதனை ரத்து செய்ய உடனடியாக இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிட்டு மெசேஜ் வரும். நம்பி கிளிக் செய்தால் மொத்த பணமும் சுருட்டப்படும். எனவே டிஜிட்டல் டெக்னாலஜி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ள்ளனர்.
அதேபோல அபராதங்களை செலுத்த அதிகாரப்பூர்வமான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
மோசடி சம்பவங்கள் காலங்காலமாக நடந்துக்கொண்டுதான் வருகின்றன. டிஜிட்டல்யுகத்திற்கு முன்னர் கூட மோசடிகள் அதிகமாக இருந்தன. குறிப்பாக புனித யாத்திரை என்கிற பெயரில் மோசடிகள் அரங்கேறியுள்ளன. அதாவது இந்தியாவின் பிரசித்திப் பெற்ற புனித தலங்களுக்கு யாத்திரை அழைத்து செல்கிறோம் என்று சொல்லி கடிதம் வரும்.
கடிதத்தில் குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும். டெபாசிட் செய்த பின்னர், யாத்திரை தினத்தன்று கொடுக்கப்பட்ட முகவரிக்கு ஆட்கள் வருவார்கள். ஆனால் அந்த முகவரியில் அப்படி எந்த டிராவல்ஸும் இருக்காது.
இப்படி பல வழிகளில் மோசடிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல வழிகளில் முயன்று வருகின்றனர். இருப்பினும் போதுமான விழிப்புணர்வு இருந்தால் மட்டும்தான் நம்மால் இதிலிருந்து தப்பிக்க முடியும்.












Click it and Unblock the Notifications