இலவச மின்சார இணைப்பு விவசாயிகளுக்கு எப்போது? நாலு மாசமாயிருச்சே.. தமிழக மின்வாரியம் சொல்வதென்ன
சென்னை: நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 23.60 லட்சம் விவசாய மின் இணைப்புகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு சராசரியாக, 30,000 ரூபாய் செலவிடப்படுகிறது. சாதாரண பிரிவில் வழங்கப்பட்ட மின் இணைப்புகளால் 5,926 கோடி ரூபாயும், சுயநிதி பிரிவில் வழங்கப்பட்ட இணைப்புகளால் 1,100 கோடி ரூபாயும் செலவாகிறது. இப்படிப்பட்ட சூழலில், அறிவிக்கப்பட்ட இலவச மின் இணைப்பு வழங்காதது ஏன்? என்ற கேள்வி விவசாயிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது. என்ன காரணம்?
தமிழ்நாட்டில், விவசாயிகளுக்கெனவே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..

இலவச மின்சார இணைப்பு
அந்தவகையில், கிட்டத்தட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு மேல் இலவச மின்சார இணைப்புகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது... எனினும், 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு இணைப்புக்கு வருடத்துக்கு மின்சார வாரியத்துக்கு 30,000 ரூபாய் செலவாகிறது.. இதை, தமிழக அரசே மானியமாக வழங்குகிறது.
எனினும், மின் வாரியமும், தமிழக அரசும் நிதி நெருக்கடியில் இருப்பதால், வருடந்தோறும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில் மட்டுமே, விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில், சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2022 - 23ல், 50,000 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன.
4 மாத அறிவிப்பு
நடப்பாண்டிலும், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தபோது, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தால் இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு 4 மாதங்களாகியும், அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
விவசாய மின் இணைப்பு வழங்கும் பணிகளை துவக்க, மின் வாரியம் சார்பில் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டும், அதற்கான அனுமதி கிடைக்காததால், மின் இணைப்பு வழங்கும் பணி துவங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளதால், உடனடியாக மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
50000 கனெக்ஷன்
"திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் 1.69 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு அடுத்தடுத்த வருடங்களில் ஆண்டுகளில் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விவசாய மின் இணைப்புகளை விரைந்து வழங்க மின்வாரியம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
வணிக ரிதியான விவசாய மின் இணைப்புகளுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதே தவிர, இலவச இணைப்புகளுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. மின் இணைப்பு பெற்ற விவசாயிகளின் விவரங்களை மின் துறை இணையதளங்களில் விரிவாக வெளியிட வேண்டும்" என்றெல்லாம் புலம்புகிறார்கள்.
அரசு தந்த நம்பிக்கை
ஆனால், இதுகுறித்து மின்வாரியம் தரப்பில் சொல்லும்போது, வரும் ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால், அதற்கு முன்னதாக மின் இணைப்பு வழங்கும் பணிகள் துவக்கப்படும்.. அத்துடன் விவசாயிகளின் கோரிக்கைகளும் உயரதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதால், விரைவில் தீர்வு கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications