தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! புறநகர் ரயில் சேவை பாதிப்பு? வெளியான தகவல்
சென்னை: சென்னையைப் பொறுத்தவரை பொது போக்குவரத்தில் புறநகர் ரயில்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயில்களில் தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையே தாம்பரம்-சானடோரியம் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் அதிக மக்கள் கூட்டம் உள்ள நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. சென்னையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க பொது போக்குவரத்தில் ரயில்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. புறநகர் பகுதிகளைச் சென்னையுடன் இணைக்கும் மின்சார ரயில்களைத் தினசரி பல லட்சம் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ரயில்கள்
டிக்கெட் ரேட் குறைவு, டிராபிக் பிரச்சினை இல்லை எனப் பல காரணங்கள் இருப்பதாலேயே ரயில் சேவைகளையே மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்தாலே இது நமக்குத் தெரியும். இதனால் புறநகர் ரயில்களில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
தடம் புரண்டு விபத்து
இதற்கிடையே தாம்பரம்- சானடோரியம் இடையேயான பாதையில் சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் சற்று நேரத்திற்கு முன்பு தாம்பரம் சானடோரியம் இடையே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளனர்.
விசாரணை
இந்த சரக்கு ரயில் மின்சார ரயில்கள் பயன்படுத்தும் பிரத்தியேக பாதையில் செல்லவில்லை. மாறாகத் தனிப் பாதையிலேயே சென்றுள்ளது. அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நல்வாய்ப்பாகப் புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம் சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்கதையாகும் விபத்துகள்
முன்னதாக கடந்த வாரம் தான் சென்னை- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கம் சிக்னல் கோளாறு காரணமாக மாலை நேரத்தில் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் குவிந்தனர்.
இதுபோல சென்னையில் அடிக்கடி சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவதால் ரயில் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் வலியுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications