அண்ணா பல்கலை விவகாரம்! ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரிக்கணும்!சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் உள்ளன. இதற்கிடையே இந்த 20 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியது.

அண்ணா பல்கலை. விவகாரம்:
சம்பந்தப்பட்ட அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை நடத்தினர். அதில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் அத்துமீறி அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் ஞானசேகரன் மீது வேறு பல வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான 20 வழக்குகளை சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை கோரி மனு:
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் என்பவர் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளைத் தமிழக போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு இந்த வழக்குகளை மாற்றக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications