ஸ்டாலினுடன் நட்புதான்..கிளைமாக்ஸ் வரட்டும்..கமல்ஹாசன் சஸ்பென்ஸ்..டக்கென்று சிரித்த தயாநிதி
முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வன் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். திமுக உடன் கூட்டணியா என்பது பற்றி இப்போது கூற முடியாது என்றும் சீன் பை சீனாக பார்த்துதான் கிளைமேக்ஸ் வரை போக வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த புகைப்பட கண்காட்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 'எங்கள் முதல்வன் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை திறந்து வைத்தும் துவக்கி வைப்பதற்காகவும் அமைச்சர் சேகர் பாபு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தார். அழைப்பிதழை வழங்கி புகைப்பட கண்காட்சியை துவக்கி வைக்க அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் மேயர் பிரியா உடன் இருந்தார்.
இன்றைய சினிமாவில் போற்றப்படும் கமல்ஹாசன், முதல்வரின் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருகை தருவது பெருத்த மகிழ்ச்சி என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இன்றைய தினம் புகைப்படக்கண்காட்சியை தொடங்கி வைத்து கமல்ஹாசன், ஸ்டாலின் சிறுவயது முதல் தற்போது முதல்வர் ஆனது வரையிலான பல கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கலைஞர் மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். எனக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இல்லாவிட்டாலும் நட்பு இருந்தது உண்மை. அந்த நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு என்பதை இருவருமே உணர்ந்திருந்தோம். அதை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறோம்.
ஒரு மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக இருப்பதில் மிகப்பெரிய சந்தோஷம் உண்டு என்றாலும் அதில் சவால்களும் உண்டு. சந்தோஷத்தையும் அனுபவித்து சவால்களையும் சந்தித்தவர் முதல்வர் ஸ்டாலின். அரசியலில் படிப்படியாக வளர்ச்சியடைந்தவர். திமுக தொண்டராக, இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வளர்ந்தவர். மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக வளர்ச்சியடைந்தவர்..இன்றைக்கு திமுக தலைவராக, மாநில முதல்வராக உயர்ந்துள்ளார். இது அவருடைய பொறுமையை காட்டுகிறது. க்யூவில் நின்று வந்து அவருடைய இலக்கை எட்டியுள்ளார்.
இதை நான் சொல்லும் போது எனக்கே ஆமாம்லா என்று ஆச்சரியமாக உள்ளது. சரித்திரத்தை அவ்வப்போது நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது. சிலர் சரித்திரத்தை மாற்றி எழுத துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசியலை மாற்றி எழுதுவதில் பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சவால் விடுவது போல நான் நினைவுபடுத்த வேண்டும்.
எப்போதுமே நல்ல செய்தி தபால்ல வரும் கெட்ட செய்தி தந்தியில வரும் என்று சொல்வார்கள். இது நல்ல செய்தி..நாம் தபால் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார். அந்த விசயத்தைத்தான் அமைச்சர் சேகர்பாபு செய்திருக்கிறார் என்று கூறினார்.
அப்போது செய்தியாளர்கள்.. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணிக்கான சிக்னலாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டனர். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த கமல்ஹாசன்.. இது அதற்காக இடமும் அல்ல நேரமும் அல்ல என்று கூறினார். சீன் பை சீனாகத்தான் கதையை நகர்த்த வேண்டும். நேரடியாக கிளைமாக்ஸ்க்கு போக முடியாது. இந்த தருணத்தில் கூட்டணி பற்றி கூற முடியாது என்றும் தெரிவித்தார். அப்போது உடன் இருந்த சேகர்பாபு, தயாநிதி மாறன் புரிந்தும் புரியாதது போல குபீரென்று வெடித்து சிரித்தனர்.












Click it and Unblock the Notifications