முடிந்தது தேர்தல்.. சீல் வைக்கப்பட்ட EVM மெஷின்கள்.. இன்று முதல் மே 4 வரை எப்படி பாதுகாக்கப்படும்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று முடிந்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். இன்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை மின்னணு இயந்திரங்கள் எப்படிப் பாதுகாக்கப்படும் என்பதைப் பார்க்கலாம்.
வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பக தன்மையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல கட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளை கடைபிடித்து வருகிறது. தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக எந்த இயந்திரம் எந்த வாக்குச்சாவடி செல்ல வேண்டும் என்பதில் மனிதர்கள் தலையீடு இல்லாமல் கணினி அடிப்படையிலான ரேண்டம் குழுக்கல் முறை பயன்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக மாவட்ட சேமிப்பு கிடங்கில் இருந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் EVM இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. EVM மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் அனைத்தும் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்படுகின்றன. இந்த அறைகளுக்குத் துணை ராணுவப் படை, ஆயுதம் ஏந்திய மாநிலக் காவல்துறை என மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அதன்பிறகு தேர்தலுக்கு முந்தைய நாளான நேற்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்தப் பாதுகாப்பு அறைகள் திறக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் முன், வேட்பாளர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி, ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சதவீத இயந்திரங்களில், வேட்பாளர்களின் பிரதிநிதிகளே 1,000 வாக்குகளைப் பதிவு செய்து 'மாதிரி வாக்குப்பதிவு' நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் இயந்திரங்கள் ஏற்றப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நாளான இன்று அதிகாலை 5:30 மணிக்கு, வாக்குச்சாவடியில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மீண்டும் ஒரு 'மாதிரி வாக்குப்பதிவு' நடத்தப்பட்டது. இயந்திரம் சரியாக வேலை செய்கிறது என்பதை அவர்கள் உறுதி செய்த பின்னரே, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு செல்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, இவிஎம் இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்கள் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் ஏஜெண்ட்களிடம் கையெழுத்துப் பெற்று, பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, தேர்தல் பார்வையாளர்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் ஆகியோர் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். தொடர்ந்து அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் முதல் அடுக்கில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் 2 மற்றும் 3வது அடுக்குகளில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணிக்கை மையங்கள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வேட்பாளர்களின் ஏஜெண்ட்களும் கண்காணிப்பார்கள்.
வேட்பாளர்கள், நேர்மையான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மையத்தில் உள்ள ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு எண்ணும் முகவரை நியமிப்பார்கள். அவர்கள், வாக்கு எண்ணிக்கையின்போது உன்னிப்பாக கவனிப்பார்கள். மே 4 ஆம் தேதி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட உள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தல் முடிவுகளை எதிர்த்து மனுத் தாக்கல் செய்ய உள்ள 45 நாட்கள் இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும். 46வது நாள் தலைமை தேர்தல் அதிகாரி, உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கு கடிதம் எழுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று கேட்பார். அது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர்கள் வழங்கும் பதிலை பொறுத்து இவிஎம் இயந்திரங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.












Click it and Unblock the Notifications