திமுகவில் அண்ணன்.. திரும்பிய பக்கமெல்லாம் புகார்கள்.. விஜய் காரை மறித்த அஜிதா ஆக்னல் யார்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தமிழ்நாடு அரசியலில் திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தல் என்றாலே உள்கட்சி பிரச்சனைகள் சகஜம் தான். தவெக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கு முயற்சி செய்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் விஜய் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்டார். ஒரே நாளில் அதிரடியாக இறங்கி அனைவரின் கவனத்தை அஜிதா ஆக்னல் பின்னணி தெரியுமா.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. திமுக, அதிமுகவை போல தவெகவிலும் கோஷ்டி அரசியல் முற்றி கொண்டிருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல் தனக்கு பதவி வழங்காத அதிருப்தியில் விஜய் காரை மறித்து, பனையூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்காமல், சாமுவேல் ராஜ் என்பவரை தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளராக விஜய் நியமித்துள்ளார். இதுகுறித்து சாமுவேல் ராஜ், அஜிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

யார் இந்த அஜிதா ஆக்னல்
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அவருக்கு இறங்கி பதில் சொல்லாமல் சென்றார். தவெக நிர்வாகிகள், பாதுகாவலர்கள் அஜிதா மற்றும் அவரின் ஆதரவாளர்களை விலக்கி வைத்தனர். இதுதொடர்பாக தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது நீண்ட காலமாக மாவட்ட தலைவராக இருந்தவர் பில்லா ஜெகன். சொந்த தம்பியை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். விஜய் மக்கள் இயக்கம், தவெக கட்சியாக மாறிய பிறகு பில்லா ஜெகன் திமுகவில் இணைந்தார்.
திமுக அண்ணன்
பில்லா ஜெகனின் சகோதரி தான் அஜிதா ஆக்னல். அவர் திமுக சென்றுவிட்டதால், அஜிதாவை தவெக பொறுப்புகளை கவனிக்க சொன்னார். அவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தவெக தலைமை சஜி என்பவரை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு அஜிதா கட்சி பணிகளில் ஒத்துழைப்பு வழங்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சஜி கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளார். அஜிதா தன்னை மோசமாக பேசியதாகவும் சஜி விஜய்யிடம் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். அடுத்தடுத்த புகார்கள் வரிசை கட்டியதால் தான் தவெகவுக்கு தூத்துக்குடிக்கு மாவட்ட செயலாளர் பதவி நியமிக்கப்படாமல் இருந்துள்ளனர். அஜிதா இதை தனக்கு சாதகமாக எடுத்து, பேனர் மற்றும் போஸ்டர்களை தன்னை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் என்று அடையாளப்படுத்தி கொண்டார்.
புகார்கள்
அஜிதா பின்னணியில் திமுக நிர்வாகி பில்லா ஜெகன் இருப்பதாலும் அவருக்கு பதவி வழங்க தவெக தயக்கம் காட்டியுள்ளது. திமுக முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், அதிமுகவில் முன்னாள் நிர்வாகி அன்னை சரவணன் தவெகவில் இணைந்திருந்தனர். கூடவே தொழிலதிபர் சாமுவேல் ராஜ் உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முயற்சி செய்தனர்.
மாவட்ட செயலாளருக்கான ரேஸ் கடுமையான நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அஜிதா விமர்சித்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23 ஆம் தேதி) தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதான கூறப்பட்டது.
கைவிட்ட தலைமை
இதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு சென்றுள்ளது. இதில் அஜிதாவுக்கு அழைப்பு செல்லவில்லை. அதன் காரணமாக தான் அஜிதா தன் ஆதரவாளர்களுடன், அவராகவே பனையூர் சென்று விஜய்யின் காரை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் தொகுதிகள் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு கிடைக்காததால், அஜிதா தவெகவில் பணம் வாங்கி கொண்டு பதவி போடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications