"திமுக உடன் ரகசிய உறவு.. 2021 தேர்தல் தோல்விக்கு காரணமே ஓபிஎஸ் தான்!" புதிய குண்டை போடும் எடப்பாடி
சென்னை: ஒபிஎஸ் அழைப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Recommended Video
ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் எழுந்த குழப்பம் இன்னும் கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.
கடந்த ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது.
ஒபிஎஸ் இருக்கட்டும்.. “எதிர்க்கட்சி தலைவராக” ஸ்கோர் பண்ணும் ஈபிஎஸ் - நாளை சம்பவம்! செக் யாருக்கு?
தீர்ப்பு
அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் மிக முக்கிய தீர்ப்பை அளித்தது. அதாவது கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பு கொடுத்தனர். குறிப்பாக அதிமுகவில் ஜூலை 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தனர். இது பன்னீர்செல்வம் தரப்பிற்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது.
அழைப்பு
அதன் பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். அதிமுக ஒருங்கிணைந்து இருக்கும் போது யாராலும் தோற்கடிக்க முடியாது என்றும் இதுவரை நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம் என்று அழைப்பு விடுத்தார். இருப்பினும், அதை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
நிராகரிப்பு
மேலும், ஓபிஎஸ் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி கூறுகையில், "ஜூன் மாதமே அதிமுக தலைமை கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற பல நிர்வாகிகளும் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றே குறிப்பிட்டனர். யார் ஒற்றை தலைமைக்கு வர வேண்டும் என எதுவும் கூறவில்லை. அதிமுக ஒற்றை தலைமையில் இயங்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஒற்றை தலைமை
அப்போதே இது குறித்து ஆலோசித்தோம். அங்கு ஓபிஎஸ் கூட இருந்தார். அதைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 23இல் பொதுக்குழு நடைபெறும் என அறிவித்த பிறகு பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் அதைத் தடுக்கும் வகையில் போலீசாருக்கும் மண்டபத்திற்கும் கடிதம் எழுதினார் ஓபிஎஸ்! மேலும், ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸே பொதுக்குழுவுக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றார்.
உழைக்க மாட்டார் பதவி வேண்டும்
அவர் உழைக்க மாட்டார். ஆனால், அவருக்குப் பதி வேண்டும். அவரது குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும். அவரது மகன் மத்திய அமைச்சர் ஆக வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலை இல்லை. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற போது, அதிமுக தலைமை அலுவலகம் சென்று சொத்து பத்திரங்களை எடுத்து ஓபிஎஸ் சென்றுவிட்டார். அதைத் தடுக்க வந்த அதிமுக தொண்டர்களையும் அடித்து நொறுக்கிவிட்டனர்.
சட்டசபை தேர்தல் தோல்வி
ஓபிஎஸ் தொடர்ந்து கட்சி விரோத போக்கையைக் கொண்டிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு அவரே காரணம். 2023 தேர்தலில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என நிர்வாகிகள் கூறினர். ஆனால், ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வெறும் 3% வாக்கு வித்தியாசத்தில் தோற்றோம். எதிர்க்கட்சி தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போதும் 63 எம்எல்ஏக்கள் என்னை ஆதரித்தனர் வெறும் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே அவர் பக்கம் நின்றனர். அப்போதும் இரு வாரங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படித் தொடர்ந்து இருந்தால் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
திமுக உடன் தொடர்பு
எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போது, திமுக ஒரு தீய சக்தி என்றும் அவர்களை அழிப்பதே முதல் நோக்கம் என்றார். ஆனால், அந்த திமுக உடன் தான் இவர் தொடர்பு வைத்துள்ளார். இவரது மகன் ஸ்டாலினை சந்தித்துச் சிறப்பான ஆட்சி எனப் பாராட்டுகிறார். இதையெல்லாம் பார்க்கும் அதிமுக தொண்டர்களுக்கு மனச் சோர்வு ஏற்படுகிறது. கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவரது மகனே இப்படிப் பேசினால் எப்படி இருக்கும்?
ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்டவர்
இதையெல்லாம் பார்த்த தொண்டர்களின் ஆசை தான் ஒற்றை தலைமை. அது எனது ஆசை இல்லை. நான் எப்போதும் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. நான் சொந்தக் காலிலேயே பதவிகளைப் பெற்றுள்ளேன். நான் கிளை செயலாளராகத் தொடங்கி, ஒவ்வொரு பதவிகளையும் பெற்றுள்ளேன். 1974 முதல் நான் ஒரே கட்சியில் இருந்துள்ளேன். அதிமுகவின் உண்மையான விசுவாசி என்று அவரே சொல்லிக்கொள்கிறார். 1989 ஜெயலலிதா முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட போது, ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்டவர் ஓபிஎஸ்" என்று சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார்.