பயங்கரம்! ஜெயக்குமார் டூ ஆம்ஸ்ட்ராங்! தமிழகத்தில் அடுத்தடுத்து கொல்லப்பட்ட 3 அரசியல் பிரமுகர்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நெல்லை ஜெயக்குமார் தனசிங், கோவை அதிமுக பிரமுகர் சண்முகம் ஆகியோர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அவ்வப்போது கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதிலும் கடந்த மே மாதம் முதல் ஜூலை முதல் வாரம் வரை 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டை பார்வையிட சென்ற போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள், நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கெனவே கொல்லப்பட்ட இருவர் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கடந்த மே மாதம் 2ஆம் தேதி நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவருடைய மகன் போலீஸில் புகார் கொடுத்திருந்த நிலையில் இரு நாட்கள் கழித்து அதாவது கடந்த மே 4 ஆம் தேதி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
அவருடைய கை, கால்கள் கம்பியில் கட்டப்பட்டிருந்தது. அவருடைய பிரேத பரிசோதனையில் அவர் இறந்து 4 மணி நேரம் கழித்தே அவர் எரிக்கப்பட்டார். அவருடைய உடலில் கடப்பா கல், இரும்பு தகடு உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. அவரது இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொலை குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அது போல் நேற்று முன் தினம் (ஜூலை 3) சேலத்தில் ஒரு அதிமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். அதிமுக கொண்டலாம்பட்டி பகுதி கழக செயலாளர் சண்முகம் (62) கடந்த 3ஆம் தேதி இரவு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேலம் மாநகராட்சி 55 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாரும், இரண்டாவது குற்றவாளியாக கவுன்சிலர் தனலட்சுமியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்படி இரு கொலைகள் நடந்த நிலையில் மூன்றாவதாக அதுவும் 2ஆவது கொலை நடந்து இரு நாட்கள் கழித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இது போல் கொலைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. எனவே தமிழக அரசு கொலைகள், கொள்ளைகளை தடுத்து நிறுத்த தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications