இனி சிக்ஸர் அடிக்கிறது தான் என் வேலை.. பக்குவமாக பேச நயினார் இருக்கிறார்.. அண்ணாமலை அசால்ட் பேச்சு
சென்னை: ‛‛இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்கொள்வார். இன்னும் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டி உள்ளது. எனக்கு இனி சிக்ஸ் அடிக்குறது தான் வேலை.'' என பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும் அண்ணாமலை பேசியதை கேட்டதும் கூட்டத்தில் இருந்த நயினார் நாகேந்திரன் சிரித்தார். அண்ணாமலையின் இந்த பேச்சின் பின்னணி பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படுகிறார்.

பாஜகவின் புதிய மாநில தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடந்தது. இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே மனுத்தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவர் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர். அண்ணாமலை மேடையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக மாநில தலைவராக இத்தனை நாட்கள் எனக்கென்று ஒரு பொறுப்பு, கட்டுப்பாடு இருந்தது. இனி என்னால் சுதந்திரமாக செயல்பட முடியும். அண்ணாமலையாக நான் அரசியல் பேச முடியும். செய்ய முடியும்.
எப்போதுமே அடித்து ஆடக்கூடிய பாக்சிங் கலை அரசியல்வாதிகளுக்கு தேவைப்படுகிறது. இதனால் இன்னும் பேச்சு ஸ்டைலை மாற்ற வேண்டும். இனி பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார். கூட்டணி பற்றி நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். அவர்கள் ஒன்று சொல்கிறார்கள் என்றால் நயினார் நாகேந்திரன் அண்ணனிடம் பேசுங்கள் என்று சிம்பிளாக கூறிவிடலாம்.
இனி நம்ம பாலை மட்டும் நாம அடித்தால் போதும். பவுன்சர்ஸ், ஃடப் பால்ஸ் எல்லாம் நயினார் நாகேந்திரன் பார்த்து கொள்வார். அவர் பிளிக் ஆடிக்கொள்வார்கள். டிபென்ட் பண்ணி கொள்வார். இனி நாம சிக்ஸ் அடிப்பது தான் நமது வேலை. கஷ்டமான பால் எல்லாம் நயினார் நாகேந்திரன் ஆடிக்குவாரு'' என்றார். இந்த பேச்சை கேட்டவுடன் பாஜகவினர் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பங்கேற்று இருந்தார். அவர் பற்றி அண்ணாமலை கூறும்போது, ‛‛டிடிவி, தினகரன் நேற்று மருத்துவமனைக்கு சென்றது குறித்து 2 நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அவரது இதயம் நல்ல இதயம் என்று தமிழக மக்களுக்கு தெரிந்து இருக்கும். நாங்கள் சொன்னால் ஏற்று கொள்வார்களா? என்பது தெரியவில்லை. இதயம் நன்றாக இருக்கிறது என அப்போலோ மருத்துவமனை சர்டிபிகேட் கொடுத்து இருக்கிறது. நீங்கள்(டிடிவி தினகரன்) அற்புதமான மனிதர். நீங்கள் நினைக்க கூடிய மாற்றங்கள் எல்லாம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்று கலகலப்பாக பேசினார்.












Click it and Unblock the Notifications