சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்!
சென்னை: நிலத்தின் பெயரால் விரிந்த வஞ்சக வலை பின்னணியில் யார் குற்றவாளி யார் பலிகடா என்ற மர்மம் இன்னமும் நீடிக்கிறது.. ஆனால், ஒரு சாதாரண ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் எப்படி ஒரு மனிதனின் உயிருக்கே உலையாக மாறியது என்பதுதான் தற்போதைய திடுக்கிடும் திருப்பமாக மாறி உள்ளது... பல் மருத்துவர் உள்ளிட்ட 9 பேர் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.. ஏன் தெரியுமா?
சென்னை மாநகரின் ராமாபுரம், செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனில்குமார்.. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்..

சென்னை காலி நிலம்
இவரது நெருங்கிய நண்பரான தாமோதரன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு நில பேரத்தை முடிக்கத் திட்டமிட்டனர்.. கேளம்பாக்கம் பகுதியில் தேவி மற்றும் ராஜு ஆகிய இருவருக்கு சொந்தமான 4,800 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு காலி மனை இருந்தது.. அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக, அதன் உரிமையாளர்களிடமிருந்து அனில்குமார் தனது பெயரில் பவர் பத்திரம் பெற்றுள்ளார்..
இந்த நிலத்தை வாங்குவதற்கு திருப்போரூரை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பல் மருத்துவர் பவா என்பவர் விருப்பம் தெரிவித்தார்.. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பினருக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டது..
பவர் பத்திரம் நில மோசடி
நிலத்தை வாங்குவதற்கான அட்வான்ஸாக 11 லட்சம் ரூபாயை அனில்குமாரிடம் மருத்துவர் பவா வழங்கினார்.. திட்டமிட்டபடி கடந்த 4ம் தேதி அந்த நிலத்தை மருத்துவர் பவாவிற்கு முறைப்படி கிரையம் செய்து கொடுப்பதற்காக, அனில்குமார் கேளம்பாக்கத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்..
ஆனால், அங்கு சென்றபோதுதான் ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.. அதாவது நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த பதிவுத்துறை அலுவலர்கள், ஆவணங்களில் சில குளறுபடிகள் இருப்பதாகவும், அதனால் இந்தப் பத்திரத்தைப் பதிவு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள்..
பல் டாக்டர் இழந்த ரூ.11 லட்சம்
இதைக் கேட்டதும் பவாவுக்கு அதிர்ச்சியில் தலையே சுற்றிவிட்டது.. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த பவா கடும் ஆத்திரமடைந்தார்.. தான் கொடுத்த 11 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்குமாறு அனில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. அதற்கு அனில்குமார், அந்தப் பணம் அனைத்தும் தனது நண்பர் தாமோதரனிடம் இருப்பதாக சொல்லி உள்ளார்..
பணம் கைக்கு வராததால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற டாக்டர் பவா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அனில்குமாரை ஒரு காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர்..
ரிசார்ட் ரூமில் டாக்டர்
கோவளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் அவரை அடைத்து வைத்த கும்பல், அனில்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.. மேலும், அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.. இதனால் அதிர்ச்சியடைந்த அனில்குமாரின் மாமா 54 வயதான கண்ணன் என்பவர், உடனடியாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் அளித்தார்..
சம்பவ இடத்திற்கு விரைந்த ராமாபுரம் போலீசார், கடத்தப்பட்ட அனில்குமாரின் செல்போன் சிக்னல் மற்றும் டவர் இருப்பிடத்தை வைத்து தீவிரமாகத் தேடினார்கள்..
சொகுசு கார்கள்
இறுதியில் கோவளம் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனில்குமாரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.. இந்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பல் டாக்டர் பவா, அவரது சகோதரர்களான 31 வயது ராஜ்குமார், 34 வயது பரண் மற்றும் அவர்களது நண்பர்களான செங்கல்பட்டை சேர்ந்த 30 வயது சதீஷ், 26 வயது வினோத், 23 வயது சாய் ரிஷி, 19 வயது ராகேஷ், 24 வயது விக்ரம் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் என மொத்தம் 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..
அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.. இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 8 பேரை போலீசார் வலைவீசித் தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஒரு நில பேரத்தில் ஏற்பட்ட குளறுபடி, ஒரு டாக்டரையே கடத்தல் குற்றவாளியாக மாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!!












Click it and Unblock the Notifications