எல்லாத்துக்கும் காரணம் SIR.. 74 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவுக்கு பின்னணி இதுதான்! டேட்டா சொல்லுது
சென்னை: 74 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில் மிக அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் 4 முனை போட்டி நிலவியது ஒருபுறம் இருந்தாலும் வாக்குப்பதிவு அதிகரிப்புக்கு பிரதான காரணம் எஸ்.ஐ.ஆர் தான் என அறியமுடிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தவெக ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். தமிழகத்தின் சில இடங்களில் சிறு மோதல் சம்பவங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது. வாக்குப் பதிவு மாலை 6 மணி முடிவடைந்த பின்னரும் சில வாக்குப் பதிவு மையங்களில் வாக்களிக்க வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இறுதியாக 85.15 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட 2026 சட்டபை தேர்தலில் சுமார் 12 சதவீதம் கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்திருந்தாலும், வாக்களித்தவர்கள் எண்ணிக்கையை பார்க்கும்போது சுமார் 25 லட்சம் வாக்காளர்களே கடந்த முறையை விட அதிகமாக வாக்களித்துள்ளனர்.
4.88 கோடி பேர் வாக்களிப்பு
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 4.63 கோடி. தற்போது வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 4.88 கோடி. 2021 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் இந்த முறை சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர்களில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இரட்டைப் பதிவு உள்ளிட்டவற்றை நீக்கி 100 சதவீதம் தூய்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் வகையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எஸ்ஐஆர் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்.
எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமாக
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணியின்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதில், 66.44 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 26.9 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 3.98 லட்சம் பேர் இரட்டைப் பதிவைக் கொண்டிருந்தவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பின்னர், முதல் முறை வாக்காளர்கள் 14 லட்சம் பேர் உள்பட 27 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் எஸ்ஐஆர் பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்ஐஆர்-க்கு பின்பு 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291ஆக குறைந்தது.
காரணம் என்ன?
எஸ்ஐஆர் பணிகளால் ஏறக்குறைய 10 சதவீதத்துக்கு மேலான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. மேலும், புதிய வரவாக வந்துள்ள கட்சிகளுக்கு இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருப்பதாலும் கணிசமாக உயர்ந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டதும், முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டியதும் 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு அதிகரித்ததற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.
மற்றபடி, ஒவ்வொரு தேர்தலின்போதும் முன்பை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது சாதாரண விஷயமே. அந்தவகையில் பார்த்தால் கடந்த முறையை விட இந்த முறை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது குறைவு தான்.
தேர்தல்கள் - ஒப்பீடு
2006 ஆம் ஆண்டு தேர்தலில் 2001 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களை விட 48 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்தனர்.
2011 தேர்தலில் 2006- ஆம் ஆண்டை விட கூடுதலாக 40 லட்சம் வாக்களித்திருந்தனர்.
2016 தேர்தலில் 2011- ஆம் ஆண்டை விட கூடுதலாக 64 லட்சம் பேர் வாக்களித்தனர்.
2021 தேர்தலில் 2016- ஆம் ஆண்டை விட கூடுதலாக 26 லட்சம் பேர் வாக்களித்தனர்.
2026 சட்டசபை தேர்தலில் 2021- ஆம் ஆண்டை விட கூடுதலாக 25 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications