பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்.. முத்துநகருக்கு ஹேப்பி நியூஸ்.. திருநெல்வேலிக்கு இப்படி ஆகிடுச்சே
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் நெல்லை இடையேயான சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில், டிக்கெட் முன்பதிவும் தொடங்கிய சில நிமிடங்களில் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்தது. அதேநேரம் தாம்பரத்தில் இருந்து முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதை பற்றி இப்போது பார்ப்போம்.
தமிழர்களின் திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள். நான்கு நாட்கள் பண்டிகையான பொங்கலை கொண்டாட, தமிழ்நாட்டில் எங்கே வசித்தாலும் தனது சொந்து ஊருக்கு மக்கள் போய்விடுவார்கள். அந்தவகையில், சென்னையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே தங்கள் சொந்த ஊர்களுக்கு ஆயத்தமாவார்கள். ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும். அதுவும் சில நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிடும். இதுவே ரயில்களில் கள எதார்த்தம். தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் சும்மாவே நிரம்பிவிடும். பொங்கல் பண்டிகை சமயங்களில் எத்தனை ரயில்கள் இயக்கினாலும் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்துவிடும்.
அந்த வகையில், தாம்பரம் நெல்லை இடையேயான சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதே நேரத்தில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கி சில நிமிடங்களில் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்தது. மேலும், இந்த தேதிகளுக்கான ஏ.சி. டிக்கெட்டுகளும் வெறும் ஒரு மணி நேரத்தில் முடிந்தது. இதனால் சிறப்பு ரயில் களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
முன்னதாக சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில்,"வரும் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி நோக்கி செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (வண்டி எண். 06001) அதேநாள் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06002) அதேநாள் இரவு 9.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இதேபோல, வரும் 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் முன்பதிவு சிறப்பு ரயில் (06003) மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் முன்பதிவு சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இதில் நெல்லை ரயில்களின் டிக்கெட் முன்பதிவு தான் சில நிமிடங்களில் முடிந்து விட்டது. ஆனால் தூத்துக்குடி ரயில் முன்பதிவு இல்லாத பகல் நேர ரயில் என்பதால், அந்த ரயிலில் கூட்டம் அலைமோதும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications