அதிமுகவை இணைக்கிறேன் என சொல்லி.. திடீரென யூடர்ன் போட்ட செங்கோட்டையன்! கடைசி நேரத்தில் என்ன நடந்தது
சென்னை: அதிமுகவை இணைக்கப் போகிறேன் என்று சில மாதங்களாகவே செங்கோட்டையன் சொல்லி வந்தார். ஆனால், கடந்த சில வாரங்களில் அவரது நடவடிக்கை மொத்தமாக மாறியது. நேற்றைய தினம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று அவர் விஜய்யின் தவெகவில் ஐக்கியமானார். கடந்த சில மாதங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் எந்தவொரு உட்கட்சி குழப்பமும் இல்லாமல் இருந்த நிலையில், சமீபத்தில் அங்கு மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் வெடித்தது. இருவருக்கும் முன்பே மோதல் ஏற்பட்ட போதிலும், அப்போது மூத்த தலைவர்கள் தலையிட்டுச் சமாதானப்படுத்தினர்.

அதிமுக இணைப்பு
இந்தச் சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் கருத்துகளைக் கூற ஆரம்பித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் குறிப்பிட்டார். அதிமுக தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்வி அடைந்து வருவதைக் குறிப்பிட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டோரை இணைக்க வேண்டும் என்றும் அப்போது தான் தேர்தலில் வெல்ல முடியும் என்றும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
அதாவது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் தரப்பை இணைக்க வேண்டும் என்றார். இது எடப்பாடி தரப்பை ஆத்திரப்படுத்தியது. அப்போதே எடப்பாடி ஆதரவாளர்கள் செங்கோட்டையனை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும், அப்போது செங்கோட்டையன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் சூழலில் தான் திடீரென செங்கோட்டையன் திடீரென ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சந்தித்தார்.
டிடிவி, ஓபிஎஸ் சந்திப்பு
தேவர் ஜெயந்தியின்போது அவர் டிடிவி மற்றும் ஓபிஎஸை நேரில் சந்தித்தார். மேலும் இருவரும் ஒரே காரில் கூட பயணித்தனர். அப்போதும் அவர் அதிமுக இணைக்கப்பட வேண்டும் என்றும் அப்போதே வெல்ல முடியும் என்றும் கூறியிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது கட்சி இணைப்பைப் பற்றி மட்டுமே செங்கோட்டையன் வலியுறுத்தினார். எடப்பாடி பெயரை கூட செங்கோட்டையன் உச்சரிக்காமலேயே இருந்தார்.
டிடிவி, ஓபிஎஸ் சந்திப்புக்கு பிறகே செங்கோட்டையன் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தார். செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அவரது ஆதரவாளர்களும் கூட கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டதாகவும் தன்னை அழைத்து என்ன பிரச்சினை என்று கூட எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.
மவுனம்
அப்போதும் கூட அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாகவே செங்கோட்டையன் பேசி வந்தார். வேறு எதாவது கேள்விகளைக் கேட்டால் சஸ்பென்ஸ் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றுமே செங்கோட்டையன் சொல்லி வந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களில் நிலைமை மாறியது. செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது.
ட்விஸ்ட்
அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவுக்கே கூட பிரச்சார திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர். அவர் தவெகவில் இணைவது அதிமுகவுக்குப் பெரிய இழப்பாகவே இருக்கும். இந்தச் சூழலில் தான் நேற்று விஜய்யைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், இன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு 4 மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications