அன்று ‘வித் அவுட்’.. பின்னாளில் விமானத்திலேயே இலவச பயணம்.. அசர வைக்கும் விகேடி பாலன் வாழ்க்கை!
சென்னை: வித் அவுட்டில் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வந்த வி.கே.டி பாலன், விமானத்தில் எங்கு சென்றாலும் இலவசம், ஹோட்டல்களில் எங்கு தங்கினாலும் இலவசம் என்ற நிலைக்கு உயர்ந்தார். விகேடி பாலன் தமது 70 வயதில் நேற்று காலமானார். கடும் உழைப்பால் உயர்ந்த விகேடி பாலனின் வாழ்க்கையும், அனுபவங்களும் நமக்குப் பெரும் பாடம்.
டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி பாலன் நேற்று (நவம்பர் 11) தமது 70வது வயதில் காலமானார். தமிழ்நாட்டின் தென் முனையில் உள்ள திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த தனபாலன், படிப்பில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர். செருப்புப் போடக்கூடாது என்பது உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகள் உச்சத்தில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த தனபாலன், அந்தக் கொடுமைகளில் இருந்து வெளியேற, முதலில் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.

வெறுங்கையோடு சென்னைக்கு வந்த பாலன்: அதன்படி, ரயிலில் டிக்கெட் எடுக்கக் கூட பணம் இன்றி வெறுங்கையோடு 1981ல் சென்னைக்கு வந்த தனபாலன், கையில் காசு ஏதுமின்றி, பல நாட்கள் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் தூங்கியவர். பகலில், அப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், கடைகளில் வேலை கேட்டுச் செல்வது, இரவில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உறங்குவது என வாழ்ந்து வந்தார். ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. ரயில் நிலைய குப்பைத் தொட்டிகளில் பயணிகள் போடும் உணவை உண்டு பல மாதங்கள் வாழ்ந்துள்ளார்.
சென்னை நகரத்தில் கடும் பசியினால் தவித்த தனபாலன், அயராமல் தொடர்ந்து வேலை தேடி வந்தார். பல இடங்களிலும் வேலைகளுக்காக முயற்சி செய்தும் யாரும் அவருக்கு கைகொடுக்கவில்லை. ஒரு நாள் வழக்கம்போல தான் எப்போதும் படுக்கும் இடத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீஸ்காரரின் லத்தி ஒன்று அவரைத் தட்டியது. தூக்கக் கலக்கத்தில் எழுந்த அவரிடம் போலீஸ்காரர் பெயர் கேட்க, அவர் "பாலன்" எனக் கூறியுள்ளார். உன் பேரைக் கேட்டா நக்கலா பண்ற..? என லத்தியால் அடித்துள்ளார் போலீஸ்காரர். அப்போதுதான், அந்த போலீஸ்காரரின் பெயர் பேட்ச்சிலும் பாலன் என இருந்ததை கவனித்துள்ளார் பாலன்.
அமெரிக்க தூதரக வாசலில்: பாலன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க திட்டமிட்ட நிலையில், போலீஸிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார் பாலன். அங்கு சாலையோரம் நடைபாதையில் ஏற்கனவே சிலர் படுத்து இருந்த நிலையில், அவரும் அங்கு படுத்துத் தூங்கி உள்ளார். காலையில் எழுந்தபோது, அவருக்கு முன்பும் பின்பும் பலர் வரிசையில் நின்றுள்ளனர். அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என ஒன்றும் புரியவில்லை.
அப்போது ஒருவர் வந்து, "உன் இடத்தை எனக்குத் தருகிறாயா? 2 ரூபாய் தருகிறேன்.." எனக் கேட்டுள்ளார். அப்போதுதான், பாலனுக்கு விஷயம் புரியத் தொடங்கியுள்ளது. அமெரிக்க தூதரகத்திற்கு அமெரிக்க விசா வேண்டி வருபவர்கள், நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க வேண்டி முந்தைய நாளே இதுபோல் வந்து படுத்துக்கொள்வார்கள். அப்படி வர முடியாதவர்களுக்கு இடம் பிடித்துக் கொடுக்கவும் சிலர் இருந்தனர். அப்படி தனபாலனும் யதேச்சையாக படுத்துத் தூங்கி, முதல் நாளிலேயே 2 ரூபாய் சம்பாதித்தார்.
டிராவல்ஸ் தொடர்பு: தொடர்ந்து அதையே தொழிலாகச் செய்து காசு பார்க்க ஆரம்பித்துள்ளார். சாப்பிட வருமானம் கிடைத்தது. அப்போது டிராவல்ஸ் நிறுவனத்தினர் சிலருடனும் அறிமுகம் கிடைத்துள்ளது. டிராவல்ஸ் நிறுவன முதலாளி ஒருவர் பாலனிடம் தன்னிடம் வேலைக்கு வருகிறாயா எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாலன் அவரது டிராவல்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இது அவருக்கு விமான டிக்கெட் கட்டணங்கள், விசா பற்றிய விவரங்கள் மற்றும் வெளிநாடு செல்ல தேவையான பிற விவரங்களை அறிய பெரிதும் உதவி உள்ளது.
டிராவல்ஸ் ஏஜென்சி வேலையின் வித்தைகளை எல்லாம் கற்றுக்கொண்டு, 1986ல் 'மதுரா டிராவல்ஸ்' என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினார். இன்றைக்கு, மதுரா டிராவல்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிவடைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிக முக்கியமான பயணம் மற்றும் சுற்றுலா ஏஜென்சிகளில் ஒன்றாக வி.கே.டி.பாலனின் மதுரா ட்ராவல்ஸ் விளங்குகிறது. எந்த எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது போலீஸ்காரர்களால் எழுப்பப்பட்டாரா, அதே எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எதிரில் தமது சொந்தக் கட்டிடத்தில் மதுரா டிராவல்ஸை நடத்தினார் பாலன்.
மதுரா டிராவல்ஸ்: IATA அங்கீகாரம் பெற்ற முன்னணி டிராவல் ஏஜென்சியாக மதுரா டிராவல்ஸ் இருக்கிறது. TAAI, TAFI, IAAI, IATO, SIHRA, FHRAI, இந்திய இரயில்வே, IRCTC, இந்திய அரசின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் துறைகளின் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது மதுரா டிராவல்ஸ். தமிழக அரசால் சுற்றுலா ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் பாலன். தமிழக அரசு பாலனுக்கு " கலைமாமணி " விருது வழங்கி கௌரவித்துள்ளது.
பாலன், "மதுரா இன்ஸ்டிடியூட்" என்ற பெயரில் ஒரு பயிற்சி நிறுவனத்தையும் நிறுவினார். இந்த நிறுவனம் விமானப் பயணம் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கிறது. இந்த நிறுவனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பயிற்சி முடிந்தவுடன் உடனடியாக வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
அன்று வித் அவுட்.. பின்னாளில் விமானங்களிலும் இலவச பயணம்: அன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் வித் அவுட்டில் வந்த பாலன், பின்னாளில் எங்கு சென்றாலும், இலவசமாக பயணிக்க, விமான நிறுவனங்களே சலுகை அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். அவரது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்ப்பு உணர்வை அங்கீகரிக்கும் வகையில் உலகின் எந்த நாட்டுக்கும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி பெற்றவர் பாலன்.
"அன்றைக்கு வித் அவுட்டில் வந்த எனக்கு, இன்றைக்கு, வானில் பறக்கும் அத்தனை விமானங்களிலும் இலவச டிக்கெட். அத்தனை விமானங்களுக்கும் நான் ஸ்டாக்கிஸ்ட்டாக இருப்பதால் அத்தனை விமான நிறுவனங்களும் எனக்கு இந்த சலுகையைத் தந்திருக்கின்றன." என பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் விகேடி பாலன்.












Click it and Unblock the Notifications