ஹேப்பி நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுது.. "10 சதவீதம்.." குளு குளு தகவல்
சென்னை: சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த 10-14 நாட்களில் கிடுகிடுவென குறைந்துள்ளது. சுமார் 10 சதவீதம் அளவுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
விலை குறைப்பு பயன்களை மக்களுக்கு, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (ஓஎம்சி) வழங்க முடிவு செய்தால் இந்தியாவில் எரிபொருள் விலை விரைவில் குறையக்கூடும்.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய்க்கு. 63.98 டாலராக விற்பனையாகிறது, இது சமீபத்தில் அதிகபட்சமாக $70 க்கு மேல் விற்பனையாகிவந்தது.

ரூ.100 விலை
ஒரு கட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற அளவுக்கு மேலே போய்விட்டது. டீசல் விலை அதிகரித்ததால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உலக அளவில் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்து கொண்டதுதான்.

எண்ணை உற்பத்தி
கொரோனா பரவல் கால கட்டத்தில், உலக அளவில் வாகன போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போய்விட்டன. எனவே அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக எண்ணை உற்பத்தி நிறுவனங்கள் முயற்சி செய்தன. இதனால் உற்பத்தியை குறைத்து விலையை ஏற்றின.

அமெரிக்காவில் ஊக்கம்
அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்புக்கு பேக்கேஜ் வழங்கப்பட்டும் பணிகள் தொடங்கிவிட்டது. எனவே, மறுபடி எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதன் காரணமாகத்தான் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக சர்வதேச சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த விலை குறைப்பு லாபத்தை மக்களுக்கு கடத்துவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மனது வைத்தால் நடக்கும்.

விலைவாசி குறையுமா
தற்போது தேர்தல் காலம் என்பதால் மத்திய அரசும், ஒருவேளை அழுத்தம் கொடுத்தால், விலைவாசி குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த துறை சார்ந்த வல்லுனர்கள். மனது வைப்பார்களா என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications