தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்.. செப்டம்பர் மாதத்திலும் முழு ஊரடங்கு தொடருமா?
சென்னை: தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 4.10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க கடைகளில் கூட்டம் கூடுவதாலும் சண்டே மார்க்கெட்களிலும் அதிகம் பேர் கூடுவதாலும் கடந்த ஜூலை மாதம் முதலே ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

7ஆம் கட்டம்
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வெளியே வர அனுமதி இல்லை
அதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பால், மருந்து கடைகளை தவிர்த்து வேறு எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை. மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இறைச்சி கடை
இதையடுத்து இன்றைய தினம் காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இன்று கடையடைப்பால் நேற்றைய தினமே கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியின்றி மக்கள் இறைச்சி உள்ளிட்டவற்றை வாங்கினர்.
Recommended Video

ஞாயிற்றுக்கிழமை ஊடரங்கு தொடருமா
செப்டம்பர் மாதம் முதல் எந்த மாநிலமும் நோய் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத இடங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கால் சனிக்கிழமையே அதிக கூட்டம் கூடுவதால் அதை ரத்து செய்ய ஏற்கெனவே கோரிக்கைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications