சென்னையில் இருந்து மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி, கடலூருக்கு புதிய ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு
சென்னை: 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிங்க் புத்தகம் வெளியிடப்படாததால், எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரயில் பாதை அமைக்க இந்த நிதியாண்டில் ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் எத்தனை புதிய திட்டங்கள், எத்தனை இரட்டைப்பாதை திட்டங்கள்? என்பன போன்ற பல விவரங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்டிருக்கிறது. இதன்படி தமிழ்நாட்டில் 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை வழியாக மதுரையில் இருந்து தூத்துக்குடி வரையிலான 143.5 கி.மீ. தூர புதிய வழித்தடத்துக்கு ரூ.55.2 கோடியும், ஈரோடு - பழனி இடையே 91.5 கி.மீ. தூர புதிய வழித்தடத்துக்கு ரூ.50 கோடியும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூருக்கு 179.28 கி.மீ. தூர புதிய பாதைக்கு ரூ.52.1 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திண்டிவனத்தில் இருந்து செஞ்சிக்கு 70 கி.மீ. தூர பாதைக்கு ரூ.42.7 கோடியும், அத்திப்பட்டு முதல் புத்தூர் வரை 88.3 கி.மீ. தூர வழிக்கு ரூ.42.7 கோடியும், திண்டிவனத்தில் இருந்து நகரிக்கு 180 கி.மீ. தூர பாதைக்கு ரூ.347.7 கோடியும், தர்மபுரி-மொரப்பூர் 36 கி.மீ. பாதைக்கு ரூ.22.2 கோடியும், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி 60 கி.மீ. தூர புதிய பாதைக்கு ரூ.4 ¼ லட்சமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மின்மயமாக்கத்துடன் கூடிய இரட்டைப்பாதை அமைப்பு பணிக்காக காட்பாடி முதல் விழுப்புரம் வரையிலான 160 கி.மீ. தூர வழித்தடத்துக்கு ரூ.200 கோடியும், சேலத்தில் இருந்து கரூர் வழியாக திண்டுக்கல் வரை 160 கி.மீ. தூர பாதைக்கு ரூ.100 கோடியும், ஈரோடு முதல் கரூர் வரையிலான 65 கி.மீ. பாதைக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் ரயில் பாதை என்பது கடந்த 19 வருடங்களாக கிடப்பில் உள்ள திட்டம் ஆகும். சென்னையில் இருந்து கடலோரப் பகுதிகள் வழியாக ரயில் பாதை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்று நினைத்த அரசு அதற்காக கோரிக்கை வைத்தது. அந்தவகையில், சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் வரை 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க கடந்த 2007-ம் ஆண்டு ரயில்வே துறை ஒப்புதல் அளித்தது.
இதற்கான ஆரம்ப கட்ட சர்வே பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிறகு, இத்திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், திட்ட மதிப்பீடு ரூ.1,500 கோடியை தாண்டியது. கடந்த மத்திய பட்ஜெட்டிலும் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால், பெரிய அளவில் பணிகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் ரூ.52.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால். தற்போதைய சந்தை மதிப்பில் நிலம் கையகப்படுத்த வேண்டும். அதற்கு பல கோடிகள் செலவாகும். ஆனால் வெறும் 52 கோடி தான் ஒதுக்கப்பட்டிருப்பதால், எந்த பெரிய முன்னேற்றமும் ஏற்படாது என்பது தான் கசப்பான உண்மை.












Click it and Unblock the Notifications