''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..!
சென்னை: தமிழக அரசியலில் தனி தடம் பதித்த ஜி.கே.மூப்பனாரின் 18-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை பற்றி சிறிய பின்னோட்டம்;
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தில் பிறந்த ஜி.கே.முப்பனார் வசதி வாய்புகளுக்கு குறைவில்லாதவர். அவரது குடும்பத்திற்கு பெயரே, பண்ணையார் குடும்பம். இன்றளவும் அந்தப் பெயரில் தான் கிராமமக்கள் வாசனையும் அழைக்கின்றனர்.
கருப்பையா என்பது தான் அவரது பெயர். பெயர் சொல்லி அழைப்பதை தவிர்ப்பதற்காக ஊர்மக்கள் மூப்பனார் என அழைக்கத் தொடங்கி அது ஜி.கே.மூப்பனார் என்றாகிவிட்டது

பணக்கார பிள்ளை
பொதுவாக பணக்கார வீட்டு பிள்ளைகள் பொதுவாழ்க்கைக்கு வருவது அறிதான நிகழ்வு. ஆனால் அந்தக்காலத்திலேயே செல்வத்திற்கு குறை இல்லாத சூழலிலும் அரசியலில் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரஸில் இணைகிறார் மூப்பனார். பார்க்க துறுதுறுவென இருந்ததாலும், பணத்திற்கு பஞ்சமில்லை என்பதாலும் 1965-ல் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவரை தேடி வந்தது.

கெட்டிக்காரர்
மூப்பனார் கிடுகிடுவென அரசியலில் வளர்ச்சியடைந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்(நிர்வாகம்) பொறுப்பு வரை வகித்தார். மூப்பனாரிடம் ஒரு வேலையை டெல்லி தலைமை கொடுத்துவிட்டது என்றால், அதனை எப்பாடுபட்டாவது சாக்குபோக்குகள் சொல்லாமல் முடித்துக்காட்டுவார். இவரது கெட்டிக்காரத் தனத்தை ராஜீவ்காந்தியே பலமுறை மூப்பனாரிடமே சிலாகித்திருக்கிறார்.

உதவும் மனசு
அரசியலில் பொதுவாக யாரும் யாரையும் வளர்த்துவிடமாட்டார்கள். இது எழுதப்படாத விதியாக இன்றும் உள்ளது. ஆனால், மூப்பனாரை பொறுத்தவரை பலரை கைதூக்கிவிட்டு ஆளாக்கிவிட்டார். புதிதாக கட்சி தொடங்கி தடுமாறிய காலத்தில், திருமாவளவனுக்கும், கிருஷ்ணசாமிக்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்தார். தொண்டரிடம் தோளில் கைபோட்டு, எப்ப சென்னை வந்த?..சரி, கவலைப்படாம ஊருக்கு போ பார்த்துகலாம் எனக் கூறி அனுப்பி வைப்பதோடு, அந்ததொண்டரின் தேவைகளையும் நிறைவேற்றி தருவாராம்.

மனக்கசப்பு
1996-ல் அதிமுகவுடன் கூட்டணி என்ற நரசிம்மராவின் முடிவை எதிர்த்து, வளமான தமிழகம்..வலிமையான பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து த.மா.கா.வை தோற்றுவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் பலர் இவர் பின்னால் அணிவகுத்து எம்.பி., எம்.எல்.ஏ.களாகினர். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில் அவர் காலமானார். எந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தாரோ அதே ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி இவர் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு த.மா.கா. காங்கிரஸில் இணைக்கப்பட்டதெல்லாம் தனிக்கதை.












Click it and Unblock the Notifications