றெக்கை கட்டி பறக்குமா ஜி.கே.வாசன் சைக்கிள்.. எங்கு போக போகுது.. என்ன பண்ண போகுது!
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளார்.
சென்னை: தமாகா கட்சி தலைவர் வாசன் இப்போது என்ன செய்ய போகிறார்? என்று அவரது ஆதரவாளர்கள் குழம்பி போய் உள்ளனர்.
மூப்பனார் காலத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து காங்கிரஸ்தான் இருந்தது. இப்போதும் கூட காங்கிரஸை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் யாருக்கும் வராது. காரணம், காங்கிரஸுக்கென்று தனியாக வாக்கு வங்கி உள்ளது. அதை இழக்க யாருக்குத்தான் மனசு வரும்.
அதனால்தான் 1989-ல் காங்கிரசுடன் இருந்து மூப்பனார் போட்டியிட்ட போதும் சரி, 1999-ல் திமுக கூட்டணியில் இணைந்து மூப்பனார் போட்டியிட்டபோதும் சரி, கிட்டத்தட்ட 15-லிருந்து 20 சதவீதம் வரை ஓட்டு வங்கியை வைத்திருந்தார்.
நிலைமை மோசம்
ஆனால் மூப்பனார் விட்டு சென்ற ஓட்டு சதவீதத்தை வாசன் தூக்கி நிறுத்துவார் என்று எதிர்பார்த்தால், இருக்கும் வாக்கு வங்கியும் சரிந்து போய்விட்டது. மூப்பனார் இடத்தை வாசனால் நிரப்ப முடியவில்லை. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் 0.54 சதவீதத்தைதான் பெற்றார். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது.
காத்திருந்தார்
இந்த சூழலில்தான் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் வாசன் உள்ளார். அவரது நிலைப்பாடு என்ன, என்ன செய்யப் போகிறார், யாருடன் கூட்டணி சேருவார் என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக யாராவது கூப்பிடுவார்களா என்று காத்து கொண்டே இருந்தார்.
யார் பக்கம்?
அதிமுக தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகளால் கலங்கிப் போய் கடைசியில் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்துவிட்டார். இப்போதும் அவரை யாரும் கூப்பிடுவதாக தெரியவில்லை. திமுக தன்னை அழைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் திமுக திரும்பிக் கூட பார்க்கவில்லை. காரணம், காங்கிரஸின் எதிர்ப்பு. தற்போது அவருக்கு முன்பு உள்ள ஒரே ஆப்ஷன் அதிமுக மட்டுமே. அதிமுக பக்கம் வாசன் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
சோனியா காந்தி
மறுபக்கம் இன்னொரு ஆப்ஷனும் உலா வருகிறது. அதாவது காங்கிரஸை பலப்படுத்தவும், திமுகவிடம் கூடுதலாக பேரம் பேச வசதியாகவும், வாசனை காங்கிரஸுக்குள் இழுக்க காங்கிரஸ் முயற்சிக்கலாமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. சோனியா காந்தி வாசனைக் கூப்பிட்டு மனம் விட்டுப் பேசி காங்கிரஸுக்குள் சேர்க்க முயலலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அப்படி நடந்தால் எல்லாமே தலைகீழாக மாறவும் வாய்ப்பு உள்ளது.
ஓபிஎஸ் ஆதரவு
இருப்பினும் இப்போதைய நிலையில் அதிமுக பக்கம் வாசன் பார்வை இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஆர்கே நகர் தேர்தலின்போது ஓபிஎஸ்-க்கு வாசன் ஆதரவை தெரிவித்துள்ளதால், இப்போது அதிமுகவில் கூட்டணி என்பது சிக்கலான ஒன்றாக வாசனுக்கு இருக்காது. அதேபோல தினகரன் தலைமையில் 3-வது அணி ஒன்று உருவானால் அதில் வாசனுக்கும் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு என்றும் கூறப்படுகிறது. இருவரும் டெல்டா மாவட்டம் என்பதும் ஒரு கூடுதல் சவுகரியம்.
சைக்கிள் சிம்பள்
மொத்தத்தில் சைக்கிளை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார் வாசன். சிங்கிளாக ஓட்டிச் செல்வாரா அல்லது டபுள்ஸா அல்லது எந்தப் பக்கம் உருட்டிக் கொண்டு போவார் என்பது கிடைக்கும் சிக்னலைப் பொறுத்தது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஒரு வேளை ரஜினியிடமிருந்து ஏதாவது சிக்னல் வந்தால் சிம்பளோடு ரஜினி பக்கமும் ஐக்கியமாகும் வாய்ப்பையும் இப்போதைக்கு மறுக்க முடியாது!