G.Venkataraman: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியானார் ஜி.வெங்கட்ராமன்! சங்கர் ஜிவால் வாழ்த்து
சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் அதற்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். டிஜிபியாக இருந்து இன்றுடன் ஓய்வு பெற்ற சங்கர் ஜிவால், கோப்புகளில் கையெழுத்திட்டு ஜி.வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தமிழகத்தின் 32 ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 30 ஆம் தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஐபிஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சென்னையின் 108ஆவது போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். இரு முறை ஜனாதிபதி பட்டம் பெற்றவர்.
டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டிஜிபி பதவிக்கு நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 6 மாதங்கள் பதவியில் இருக்க வேண்டும். ஏற்கெனவே பணியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, தகுதிவாய்ந்த 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (யுபிஎஸ்சி) அனுப்பி வைக்க வேண்டும்.
யுபிஎஸ்சி அந்தப் பட்டியலில் இருந்து மூன்று அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைத்து மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்கும்.
தமிழக அரசு ஏற்கெனவே யுபிஎஸ்சி-க்கு பட்டியலை அனுப்பி வைத்தாலும், மத்திய அரசிடமிருந்து இதுவரை பரிந்துரைப் பட்டியல் வரவில்லை. இந்தப் பட்டியலில் சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசின் பரிந்துரைப் பட்டியல் வராத நிலையில், இடைக்கால ஏற்பாடாக ஜி. வெங்கட்ராமன் புதிய பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்தன. அதற்கேற்ப முதல்வர் ஸ்டாலின் 30 ஆம் தேதி வெளிநாட்டு பயணம் செல்லவிருந்த நிலையில் கடந்த 29ஆம் தேதியே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால் சென்றிருந்த நிலையில் அங்கு வெங்கட்ராமனும் வருகை தந்திருந்ததால் அவர்தான் பொறுப்பு டிஜிபி என ஊர்ஜிதமானது. ஆயினும் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் ஜி.வெங்கட்ராமனிடம் , சங்கர் ஜிவால் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய டிஜிபிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளையும் தெரிவித்தார். ஜி.வெங்கட்ராமன் தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் பி.ஏ. (வணிகவியல்), எம்.ஏ. (பொது நிர்வாகம்) படித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார்.












Click it and Unblock the Notifications