Game Changer Review: ராம் சரண் அசத்தல்.. சரிந்த இமேஜை தூக்கி நிறுத்திய ஷங்கர்! கேம் சேஞ்சர் விமர்சனம்
சென்னை: தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' (Game changer review) திரைப்படத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதியுள்ளார்.
'கேம் சேஞ்சர்' படம், வழக்கமான ஷங்கர் படங்களை போலவே, சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து, ஊழலுக்கு எதிராக போராடும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. மதுரையில் கலெக்டராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியை இன்ஸ்ப்ரேஷனாக கொண்ட கதையாகும் இது.

கதை என்ன?
நேர்மையான IAS அதிகாரியாக இருக்கும் ராம் சரண், மக்களின் நலனுக்காகவும், ஊழலை ஒழிக்கவும் தொடர்ந்து போராடி வருகிறார். அவர் பணியாற்றும் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அநியாயங்களையும் தட்டி கேட்டு, அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார்.
இதேவேளை, மாநில முதல்வர் தனது மாநிலத்தில் எந்த ஒரு குற்றச் செயலும் நடைபெறக்கூடாது என்ற உறுதியுடன், ஒரு புதிய அதிரடி திட்டத்தை அறிவிக்கிறார். இந்த திட்டத்தின் காரணமாக, முதல்வரின் மகன் எஸ்.ஜே. சூர்யாவுக்கு சொந்தமான மணல் கொள்ளை தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
தந்தைக்கு தெரியாமல் இரவில் மணல் கொள்ளையை தொடர முயற்சிக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ராம் சரண் தடையாக நிற்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவாகிறது. ராம் சரணின் நேர்மை மற்றும் தைரியம் எஸ்.ஜே. சூர்யாவை எரிச்சலடையச் செய்கிறது.
முதல்வரின் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையில் எஸ்.ஜே. சூர்யா, தனது தந்தையை கொலை செய்யத் திட்டமிடுகிறார். இதற்கு ராம் சரணையும் கொல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகிறது. ஆனால், முதல்வர் கொல்லப்படுவதற்கு முன், தனது வாரிசாக யாரை தேர்வு செய்திருக்கிறார் என்பதை குறிப்பிடும் ஒரு வீடியோவை பதிவு செய்கிறார்.
முதல்வரின் மரணச் செய்தி மற்றும் அவர் பதிவு செய்த வீடியோ வெளியாகியதும், முழு மாநிலமும் ஷாக் அடைகிறது. எஸ்.ஜே. சூர்யாவும் தனது தந்தை எடுத்த முடிவை அறிந்து அதிர்ச்சியடைகிறார். இதன் பிறகு, ராம் சரண் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இடையேயான மோதல் மேலும் தீவிரமடைகிறது.
இந்த சூழ்நிலையில், ராம் சரண் எவ்வாறு எஸ்.ஜே. சூர்யாவின் திட்டங்களை முறியடித்து, மக்களின் நம்பிக்கையை வெல்லுகிறார் என்பதே மீதிக்கதை.
தந்தை-மகன் பாசம், சமூக பொறுப்புணர்வு என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இந்த படம், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்துள்ளது. அதேநேரம், சாமானியன் ஒருவர், அதிகாரத்தை எதிர்க்கும் ஹீரோவாக சித்தரிக்கப்படும் தனது வழக்கமான பாணியிலிருந்து மாறி, இந்த முறை அரசு இயந்திரத்தில் ஐஏஎஸ் போன்ற முக்கிய பணியில் இருக்கும் ஒருவர் கிளர்த்தெழுவதாக படமெடுத்துள்ளார் ஷங்கர்.
ராம் சரண், மிகச்சிறந்த நடிப்பு
இரட்டை வேடத்தில் நடித்துள்ள ராம் சரண், தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஸ்டைலிஷ் ஐஏஎஸ் அதிகாரியாகவும், எளிய கிராமத்து இளைஞனாகவும் தன்னை மாற்றிக்கொண்டு, இரண்டு வேடங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார். "ரங்கஸ்தலம்" RRR, படத்திற்குப் பிறகு ராம் சரண் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். பேச்சு குழறும் குணம் கொண்ட இந்த கதாபாத்திரத்தை அவர் மிகவும் உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறார். பேச்சு குறைபாடுகள் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்த கதாபாத்திரம் உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது.
அஞ்சலியின் சிறப்பான நடிப்பு
அப்பண்ணாவின் மனைவி பார்வதியாக நடித்துள்ள அஞ்சலி, தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரது கண்களில் பேசும் உணர்ச்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைக்கின்றன. அப்பண்ணா மற்றும் அவரது மனைவி ஆகியோரின் கதை திரைப்படத்திற்கு உணர்ச்சிகரமான அடித்தளமாக அமைகிறது.
தொழில்நுட்பம்
தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. குறிப்பாக 'ஜருகண்டி' பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகிய காட்சிகளை வழங்கியுள்ளது.
கேம் சேஞ்சர் குறைகள்
கதை சில இடங்களில் முன்னரே கணிக்க கூடியதாக இருப்பது ஒரு சிறிய குறையாகும். மேலும், கதைக்களம் அட்வைஸ் செய்வதாக இருப்பதாக சிலர் கருதலாம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளது. பின்னணி இசையில் சில இடங்களில் இரைச்சல் அதிகம். ஓட்டு கவுண்டிங்கை நிறுத்த எஸ்ஜே சூர்யா முயலும் காட்சிகள் இந்த காலகட்டத்திற்கு பொருந்தாததாக உள்ளது. ஷங்கர் இன்னும் அப்டேட் செய்ய வேண்டிய அவசியத்தை சில காட்சிகள் காட்டுகின்றன. ஆரம்பத்தில் விறுவிறுவென செல்லும் படம் சில நேரங்களில் தொய்வடைகிறது. பிறகு விறுவிறுப்படைகிறது. லாஜிக் மீறல்கள், யூகிக்கும் கதை மைனஸ்தான். ஆனால் ராம் சரண் படத்தை தனது தோளில் தூக்கிச் சென்றுவிடுகிறார்.
கேம் சேஞ்சர் விமர்சனம்
'கேம் சேஞ்சர்' திரைப்படம், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாகும். ஷங்கரின் இயக்கம், ராம் சரணின் நடிப்பு, மற்றும் படத்தின் தொழில்நுட்பம் ஆகியவை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளன. இந்த படம், தெலுங்கு சினிமாவிற்கு தேவையான மசாலா ஐட்டங்களுடன் வெளியாகியுள்ளதால், அங்கு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியன் 2 திரைப்படத்தில் சறுக்கிய ஷங்கர், இந்த படத்தில் சற்று எழுந்து உட்கார்ந்துள்ளார். ஆனால், முழுமையாக எழுந்து சீறிப் பாய வேண்டும் என்பதே அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications