ஒடிசா டூ சென்னை.. ரயிலில் நடந்த கஞ்சா கடத்தல்.. காத்திருந்து தூக்கிய சென்னை போலீஸ்!
சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்த முகமது முஸ்தபா என்பவரை சங்கர்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஒடிசாவில் 1 கிலோ கஞ்சாவை ரூ.30 ஆயிரத்திற்கு வாங்கி வந்த முகமது முஸ்தபா, சென்னையில் சிறிய பாக்கெட்டுகளில் போட்டு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், சிறார்கள் என்று பலரும் கஞ்சாவிற்கு அடிமையாக இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் பின்னணியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்த இளைஞரை சென்னை சங்கர்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவர் முகமது முஸ்தபா. பட்டதாரியான இவர் 2023ஆம் ஆண்டு 10 கிலோ கஞ்சாவுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இதன்பின் சிறையில் இருந்து வெளி வந்த முகமது முஸ்தபா, மீண்டும் கஞ்சா விற்பனையில் இறங்கி இருக்கிறார். கஞ்சாவை ஒடிசா மாநிலம் சென்று ஒரு கிலோ ரூ.30 ஆயிரத்திற்கு வாங்கி வந்து, சென்னையில் அதனை சிறிய பாக்கெட்டுகளாக பிரித்து ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக முகமது முஸ்தபா ஒடிசாவிற்கு ரயில் சென்றுள்ளார். இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
ஒடிசாவில் இருந்து கஞ்சாவுடன் முகமது முஸ்தபா திரும்பிய நிலையில், சங்கர்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி அவரை பிடித்திருக்கின்றனர். அப்போது முகமது முஸ்தபாவிடம் 7 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து 7 கிலோ கஞ்சா மற்றும் அவரின் செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், பல்லாவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார்.












Click it and Unblock the Notifications