ஒரு சிலிண்டர் ரூ.4 ஆயிரமாம்.. டீ, காபி விலையை உயர்த்திய கடை உரிமையாளர்கள்.. பாதிக்கப்படும் மக்கள்!
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு டீ, தற்போது ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்ட காபி, ரூ.25க்கு விற்பனை செய்யப்படுவதாக சாமானிய மக்கள் புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனை மீறி ஹார்மூஸ் நீரிணை வழித்தடத்தில் எந்த சரக்கு கப்பல் வந்தாலும், தாக்குதல் நடத்துவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் மட்டுமல்லாமல் எரிவாயு விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 60% எரிவாயு சவுதி அரேபியாவை நம்பியே இருக்கிறது. தற்போது விநியோகம் தடைப்பட்டுள்ளதால், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
அப்படியே சில ஹோட்டல்கள் செயல்பட்டாலும் அதில் உற்பத்தி செய்யும் உணவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் விடுதிகளில் சாப்பாடு கட் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பணியாற்றும் இளைஞர்கள் பலரும் சிக்கலை சந்திக்க தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றன.
இந்த நிலையில் சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையில் டீ கடைகளில் ஒரு டீ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல் காபி ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் டீ, காபி விலையை டீ கடை உரிமையாளர்கள் உயர்த்தி இருக்கின்றனர்.
இதுகுறித்து டீ கடை உரிமையாளர்களிடம் கேட்ட போது, கேஸ் சிலிண்டர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.. ஒரு சிலிண்டர் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரமாக ஏஜென்சிகள் விற்பனை செய்கிறார்கள் என்று புலம்பி வருகின்றனர். இதனால் சிலிண்டரை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications