ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை பார்த்தீர்களா? தமிழக மக்களே "சங்கிகள்தான்”.. அடித்து சொல்லும் காயத்ரி ரகுராம்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் அமைப்பின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊர்வலம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாக கூறியிருந்தது.
இந்நிலையில், நேற்று கடலூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை குறிப்பிட்டு, "தமிழ்நாட்டு மக்கள் நம்மில் பெரும்பாலானோர் சங்கிதான்" என்று பாஜக மாநில தலைவர்களுள் ஒருவரான காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார்.
தடை
காந்தியை ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரிக்கையில், ஊர்வலத்தை சுற்றுச்சுவர் கூடிய காலி மைதானத்தில்தான் நடத்த வேண்டும் என்றும், மதம், சாதி உள்ளிட்டவற்றை இழிவுப்படுத்தும் முழக்கங்கள், பாடல்கள் ஆகியவற்றை பாடக்கூடாது என 11 நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பேரணி
இதனையடுத்து ஊர்வலம் நடத்தும் திட்டத்தை அமைப்பினர் ஒத்தி வைப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் மூன்று மாவட்டங்களில் மட்டும் இந்த ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. பேரணியில் மூன்று மாவட்டங்களிலும் தலா 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த பேரணி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
சங்கிகள்
இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜகவின் காயத்ரி ரகுராம், "ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 1/2% திருமா கட்சியும் 1% டி-ஸ்டாக்களும் பயப்பட காரணம். 1.தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அதிக அளவில் உள்ளனர் 2.தமிழ்நாட்டு மக்கள் நம்மில் பெரும்பாலானோர் சங்கி இந்துத்துவவாதிகள். 3.மக்கள் பலத்தை மக்கள் உணர்ந்துவிடுவார்கள் என்று அஞ்சுவது. 4. தேசம் முதல் கட்சி அடுத்தது சுயமாக கடைசி." என்று கூறியுள்ளார். தமிழ்நாடு சுயமரியாதை மாநிலம் என்றும், திராவிட பாரம்பரியம் கொண்ட மாநிலம் என்றும் திமுகவினர் கூறி வரும் நிலையில் தமிழக மக்கள் சங்கிகள் என்று காயத்ரி ரகுராம் கூறியிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனம்
ஏற்கெனவே தமிழர்கள் திராவிடர்கள் அல்ல என தமிழ் தேசிய அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். அதேபோல, தமிழ்நாடு மதம் சார்ந்த மாநிலம் என்றும், திருவள்ளுவர் இந்து என்றும் பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள், அரசியல் அமைப்புகள் வலுவாக கூறி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழர்கள் சங்கிகள் என்று காயத்ரி ரகுராம் கூறியிருப்பது, மேற்குறிப்பிட்ட கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.