எம்.கே.ராதா காலில் விழுந்தவர் எம்ஜிஆர்.. ஆ.ராசா பேச்சு பரபரப்புக்கு மத்தியில் காயத்ரி ரகுராம் பதிவு
சென்னை: எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது பழம்பெரும் நடிகர் எம்.கே.ராதாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் என தெரிவித்து உள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், தொடர்ந்து அண்ணாமலையையும், பாஜகவையும் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்த நிலையில் சமூக வலைதளங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசா எம்ஜிஆரை விமர்சித்து பேசிய வீடியோ வெளியாகி எடப்பாடி பழனிசாமி அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கும் நிலையில் எம்ஜிஆர் குறித்து இவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், "மனிதரை மதிக்கும் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த நிகழ்வு. ஒரு விழாவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. விழா மேடையில் கலைஞர்கள், பழம்பெரும் நடிகர் திரு.எம்.கே.ராதா மற்றும் நடுநாயகமாக அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அருகே அமைச்சர் திரு நெடுஞ்செழியன். இப்போது விருது வழங்கும் நிகழ்ச்சி : முதல்வர் அவர்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச்செல்கின்றனர்.
இப்போது ராதா அவர்கள் விருது வாங்க செல்லும்போது முதல்வர், அவ்விருதை நெடுஞ்செழியனை வைத்து தரச்செய்கிறார். திரு ராதாவுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி. ராதா அவர்களுக்கும் மிக ஆதங்கம் முதல்வர் கையினால் வாங்க முடியவில்லையே என்று. நொந்தபடியே தன் இருப்பிடத்திற்கு திரும்பியபோது ஓர் அதிர்ச்சி...!!!மேடையில் முதல்வரைக் காணவில்லை. !!! குனிந்து பார்த்தால் முதல்வர் தன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி...!!!
திரு. ராதா ஏதோ சொல்ல முயலும் போது... அவரை தடுத்து எம்.ஜி.ஆர் கூறியதாவது : "நான் ஆரம்ப காலத்தில் கஷ்டப்படும் போது தங்கள் பெற்றோர் என்னை மகன் போலவும் தாங்கள் என்னை சகோதரன் போலவும் கருதி இருக்க இடம் உணவு உடையும் கொடுத்து எனக்கு சினிமாவில் வாய்ப்பும் கொடுத்து, நான் இந்த நிலையை அடைய மூல காரணமாக இருந்த தங்களுக்கு நான் போய் விருது வழங்குவது தங்களை அவமதிக்கும் செயலாகும். "தங்களன்றோ என்னை ஆசீர்வதித்து அருளி இச்சபையின் முன் கௌரவிக்க வேண்டும் " என்று சொன்னது தான் தாமதம்.
திரு ராதா உள்பட அனைவரின் கண்களும் குளமாயின... ஒரு மாநில முதல்வர் கௌரவம் பார்க்காமல் தனது நன்றியையும் விசுவாசத்தையும் உலகறியச் செய்து திரு ராதா அவர்களுக்குப் பெருமை சேர்த்ததை புகழ வார்த்தைகள் தான் ஏது???" என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications