வரிசையா வந்த வண்டி.. எடப்பாடி ‘ஜெல்’.. உற்றுப்பார்த்த திமுக ‘தலை’.. கேட் போடுங்க.. பறந்த உத்தரவு!
சென்னை : எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது நடந்த நிகழ்வுகள் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
சட்டசபையில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து ஈபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டதால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இதனைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்த போராட்டத்தின்போது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது.
அதிமுக கூட்டணிக்குள் மீண்டும் 'ஜெல்' உருவாகத் தொடங்கியுள்ளதை அறிந்து திமுக தலைவர் ஸ்டாலின் உடனே ஒரு ஆர்டரை போட்டதாகக் கூறப்படுகிறது.

எடப்பாடி போராட்டம்
தமிழக சட்டசபையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரம், ஓபிஎஸ் சீட் மாற்றப்படாதது தொடர்பாக எழுந்த அமளியால் ஈபிஎஸ் தரப்பினர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அதிமுகவினர் புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வேகமாக வந்த கூட்டணி புள்ளிகள்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுக சின்னத்தில் நின்று வென்று எம்.எல்.ஏ ஆன புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர். தமிழக சட்டசபையில் 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கொண்ட எதிர்க்கட்சி அதிமுக, அப்படிப்பட்ட கட்சி தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சி துணைத் தலைவரை சபாநாயகர் அங்கீகரிக்க மறுப்பதும், உண்ணாவிரத போராட்டம் நடத்த மறுப்பதும் ஜனநாயக படுகொலை என கிருஷ்ணசாமி கூறினார்.

போலீசாருக்கு பறந்த உத்தரவு
இந்த நிகழ்வுகளை எல்லாம் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொலைக்காட்சி வாயிலாக கவனித்துள்ளார். உடனே, இனி வேறு யாரேனும் அரசியல் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை பார்க்க வந்தால் அனுமதிக்க வேண்டாம் என போலீசாருக்கு உத்தரவு பறந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக போலீசாரின் கெடுபிடி அதிகரித்துள்ளது. அதற்குப் பிறகு எடப்பாடியை சந்திக்க வந்த கூட்டணி கட்சி தலைவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

வரிசையாக வந்த கரை வேட்டிகள்
தமிழக பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாக தலைவர் ஜிகே வாசன் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏவான தமமுக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவிக்க தனித்தனியாக அடுத்தடுத்து வந்தனர். ஆனால், போலீசார் அவர்களை எடப்பாடி பழனிசாமியை சந்திக்க விட மறுத்தனர். ஏற்கனவே கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்ற நிலையில், தாங்கள் அனுமதிக்கப்படாததால் போலீசாரிடம் ஜிகே வாசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ரோட்டிலேயே அமர்ந்த வாசன்
மேலிட உத்தரவு, கைது செய்யப்பட்டிருப்பவர்களை பார்க்க விட முடியாது என போலீசார் சொல்லவும், ஜிகே வாசன் சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். நயினார் நாகேந்திரனும், ஜான் பாண்டியனும் அனுமதி மறுக்கப்பட்டதால், திரும்பிச் சென்றுவிட்டனர். எனினும், எடப்பாடி பழனிசாமி, தன்னை சந்திக்க வந்துவிட்டு, அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிய தலைவர்களுடன் போனில் பேசியுள்ளார். இதுவும் முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

போனில் பேசிய ஈபிஎஸ்
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகிய கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளும் இணக்கமான உறவைக் கையாளவில்லை. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நாளொரு கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன. இதனால் அதிமுக கூட்டணி குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகிறது.

உன்னிப்பாக கவனித்த தலைமை
இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வந்ததை திமுக தலைமை உன்னிப்பாக வாட்ச் செய்துள்ளது. அதிமுக கூட்டணிக்குள் 'ஜெல்' உருவாக இந்த போராட்டம் விதை போட்டுள்ளதையும் ஸ்டாலின் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெல் - உடைக்கும் வேலை
பாமக உள்பட அதிமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளை வரும் தேர்தலில் தங்கள் பக்கம் இழுக்க திமுக முயற்சி மேற்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், அதிமுக கூட்டணி புத்துயிர் பெற்றுவிடக் கூடாது என்பது திமுக தலைமையின் எண்ணமாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஈபிஎஸ்ஸை சந்திக்க கூட்டணி கட்சி தலைவர்கள் படையெடுத்ததை உற்று நோக்கியுள்ள திமுக தலைமை, அடுத்தகட்டமாக அதனை உடைக்கும் வேலையில் ஈடுபடலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications