எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்.. வீடு கட்ட ஆன்லைனில் அனுமதி பெறலாம்.. தொடங்கி வைத்த ஸ்டாலின்
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆன்லைன் மூலம் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை.
தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் , சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்டவை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் தான், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அதாவது தொழில்நுட்ப வளர்சியின் படி கோப்புகளை அதிகளவில் குவிப்பதை தடுக்கும் நோக்கத்தில் அனைத்து வகையான செயல்பாடுகளும் ஆன்லைனில் மாற்றப்படுகின்றன.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டிட அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் இருக்கிறது. அதே போல உள்ளாட்சி அமைப்புகளிலும் ஆன்லைனில் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கடந்தாண்டு முதல் ஊராட்சிகளில் கட்டிட அனுமதிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு அமலில் உள்ளது.
அதேபோல, தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் படி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்ற பிறகுதான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும் என்ற நிலை இருந்தது. இதில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, அதிகபட்சம் எட்டு வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவது அவசியம் இல்லை.
அதேபோல உயரமில்லா கட்டிடங்களுக்கான அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்டது. அது மட்டும் இன்றி , 300 சதுரமீட்டர் வரையும், உயரத்தில் 14 மீட்டருக்கு மிகாமலும் கட்டப்படும் கமர்ஷியல் கட்டிடங்களுக்கும் பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான், கடந்த பட்ஜெட்டில் 2,500 சதுர அடி வரை கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு கட்டிட அனுமதி தேவையில்லை என்றும் பணி முடிவு சான்று பெற தேவையில்லை என்ற அறிவிப்பும் வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதல் முறையாக கட்டிட அனுமதியை ஆன்லைனில் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
'www.onlineppa.tn.gov.in’ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை.












Click it and Unblock the Notifications