முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங். அதிருப்தி கோஷ்டி தலைவர் குலாம்நபி ஆசாத் சந்திப்பு
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் அதிருப்தி அணிகளின் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் சென்னையில் சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கின்றன என்றும் குலாம்நபி ஆசாத் பாராட்டு தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் கோபத்தில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின்ம 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
அப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் குலாம் நபி ஆசாத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

காங்.அதிருப்தி
பின்னர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக 23 காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்த 23 பேர் கொண்ட அணிக்கு தலைவரே குலாம் நபி ஆசாத்தான் என கூறப்பட்டது. இதனால் குலாம் நபி ஆசாத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி.சீட் வழங்கப்படவும் இல்லை.

ராஜ்யசபாவில் மோடி புகழாரம்
ராஜ்யசபா எம்.பி. பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடைபெற்ற போது பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார். குலாம் நபி ஆசாத்தும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். அப்போதே அடுத்த துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம் நபி ஆசாத்தை பாஜக முன்னிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற பேச்சு எழுந்தது. அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியில் தீவிர நடவடிக்கைகளிலும் குலாம் நபி ஆசாத் ஈடுபடாமல் ஒதுங்கியே இருக்கிறார்.

ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு
ராஜ்யசபா இடைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து திமுக சார்பாக தமக்கு சீட் கேட்டு லாபி செய்துப் பார்த்தார் குலாம் நபி ஆசாத். ஆனால் டெல்லி மேலிடத்தின் அதிருப்தியை உணர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு சீட் தர மறுத்தது திமுக தலைமை. இந்த நிலையில் இன்று சென்னையில் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலினை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு
இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றன. இச்சந்திப்பின் போது எம்.பிக்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார். நாளொன்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார் என புகழ்ந்தார்.












Click it and Unblock the Notifications