ஸ்டாலின் கண்டனம் எதிரொலி: செஞ்சி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் தந்தை பெரியார் விருது
சென்னை: தமிழக அரசின் தந்தை பெரியார் விருது மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு தந்தை பெரியார் விருது யாருக்கு என அறிவிக்கப்படாமல் இருந்தது.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தமது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளில் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது இந்தாண்டு விருது பட்டியலில் அறிவிக்கப்படவில்லை.
தங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான பெண்மணி ஒருவருக்கு வழங்கினார்கள். இந்த ஆண்டு சொந்தக் கட்சியிலும் அந்த விருதுக்கு ஆள் இல்லையா, அல்லது தங்கள் டெல்லி எஜமானர்களின் மனதைக் குளிர்விப்பதற்காக தந்தை பெரியார் விருது தவிர்க்கப்பட்டுள்ளதா? காரணம் என்ன என்பதைத் தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தந்தை பெரியார் விருது திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருப்பதற்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தந்தை பெரியார் விருது மூத்த அரசியல்வாதியான செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், மதிமுகவை வைகோ தொடங்கிய போது அவருடன் இணைந்தார். பின் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் செஞ்சி ராமச்சந்திரன் இணைந்தார்.
இதேபோல் புலவர் வெற்றி அழகனுக்கு கபிலர் விருது, மகாதேவனுக்கு உ.வே.சா. விருது, சரஸ்வதி ராமநாதனுக்கு கம்பர் விருது, உமையாள் முத்துக்கு அம்மா இலக்கிய விருது, முனைவர் க.அருச்சுனனுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications