போதைப் பொருளை விற்பதே பாஜகவினர் தான்.. தைரியம் இருந்தா கேளுங்க.. எடப்பாடிக்கு ஆர்.எஸ்.பாரதி சவால்!
சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளிக்கிறார், ஆனால் போதைப்பொருட்களை விற்பனை செய்வதே பாஜகவினர் தான், தைரியம் இருந்தால் ஈபிஎஸ் அவர்களை கேட்கட்டும் என திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை தமிழக அரசால் தடுக்க முடியவில்லை என புகார் தெரிவித்தார்.
அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் போதைப் பொருட்கள் கொண்டு வரப்படுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்ததாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
டிசம்பர் 1ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! எதற்காக இந்த மீட்டிங் தெரியுமா?
ரத்தத்தில் ஊறியது
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "திரவிட இயக்கம்தான் இனத்தையும் மொழியையும் காப்பாற்றும் கொள்கையுள்ள கட்சி. இந்தி எதிர்ப்பு என்பது திமுககாரனின் ரத்தத்தில் ஊறியது. தனது 14 வயதில் தமிழ் கொடியை கையில் ஏந்தி 93 வயதுவரை இந்தி திணிப்பை எதிர்த்தே மறைந்தவர் கருணாநிதி. இந்தி எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி 62 நாள் பாளையங்கோட்டையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்காகவே ஓர் ஆளுநர்
மும்மொழிக் கொள்கையை ஏற்ற மாநிலங்களில் இன்று அவர்களின் தாய் மொழி அழிந்து வருகிறது. மக்களை ஏமாற்றி மத்திய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது. இதற்காக ஓர் ஆளுநர் வேறு பணியாற்றுகிறார். நமது வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு தமிழகம் திராவிட நாடு இல்லை என்கிறார். தமிழை அழிக்க முயற்சி நடக்கிறது." எனப் பேசினார்.
எடப்பாடியை கேட்கிறேன்
மேலும் பேசிய அவர், "ஆளுநரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது. போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புகார் அளித்துள்ளார். எடப்பாடியை பார்த்து கேட்கிறேன் உங்கள் ஆட்சியில் எல்.ஈ.டி பல்பு வாங்கியது, துடைப்பம் வாங்கியது முதல் அனைத்திலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நானும், சபாநாயகரும் வழக்கு தொடுத்துள்ளோம்.
சிறை செல்வது உறுதி
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் குட்கா விற்பனை செய்ததாக சிபிஐயை வைத்து முன்னாள் அமைச்சர் விஜயகாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் மத்திய அரசு. தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், எனவே நீங்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி என எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
விற்பதே பாஜக தான்
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளிக்கிறார். போதைப் பொருள் விற்பனையில் பா.ஜ.கவினர்தான் ஈடுபடுகின்றனர். உதாரணமாக 5½ கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கிம் மாநிலத்தில் துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த போதைப் பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை. துறைமுகம் யார் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். தைரியம் இருந்தால் எடப்பாடி இதுகுறித்து கேட்கட்டும்" எனத் தெரிவித்தார்.