ஊருக்கு போய் ஓட்டு போடறீங்களா? ஆம்னி பஸ்ஸில் அதிக கட்டணம் கேட்டால் உடனே போன் அடிங்க! பறிமுதல் உறுதி
சென்னை: ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்து வருகிறது.. தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போடச் சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கப் போக்குவரத்துத் துறை அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ஒரு ரூபாய் அதிகமாகக் கேட்டாலும், பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாகப் பிரத்யேகக் கட்டுப்பாட்டு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. விதிகளை மீறும் பேருந்துகளை உடனடியாகப் பறிமுதல் செய்யப் பறக்கும் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், இனி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்து நிறுவனங்கள் தப்பிக்க முடியாது..!!
தமிழகத்தில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்று ஓட்டுப் போடுவதற்காக மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக, வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற ஊருக்குக் கிளம்பத் தொடங்கிவிட்டனர். ஆனால், இதைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்படுவது மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.
ஆம்னி பஸ்களில் வாக்காளர்களிடம் அதிக கட்டணம்
சாதாரண நேரத்திலேயே அதிக கட்டணம் இருக்கும் நிலையில், தேர்தல் நேரத்தில் டபுள் மடங்கு, 3 மடங்கு என்று விலையை உயர்த்துவதால், "சொந்த ஊருக்குப் போய் ஓட்டுப் போடக்கூட இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா?" என்ற ஆதங்கம் நடுத்தர மக்களிடையே எழுந்துள்ளது.
இந்த கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை இப்போது அதிரடியாகக் களத்தில் இறங்கி இருக்கிறது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தால் கூட அந்த பேருந்து மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை மற்றும் தேர்தல் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நடக்கும் இந்த சுரண்டலை தடுக்க, தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படைகள் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

அதிக கட்டணம் - புகார் எண்கள்
வெளியூர் செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிறுவனங்கள் ஏதேனும் தொல்லை கொடுத்தாலோ அல்லது கூடுதல் கட்டணம் கேட்டு வற்புறுத்தினாலோ, மக்கள் பயப்படாமல் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்து வைத்திருக்கிறது. பொதுமக்கள் 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு உடனுக்குடன் தகவல்களைத் தெரிவிக்கலாம்.
இது தவிர, 044-24749002 மற்றும் 044-24741071 ஆகிய எண்களும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. புகார் அளிக்கும்போது அந்தப் பேருந்தின் எண் மற்றும் டிக்கெட் விவரங்களைக் கையில் வைத்திருப்பது நடவடிக்கையை எடுக்க இன்னும் வசதியாக இருக்கும்.
ஒருவேளை செக்கிங் செய்யும்போது விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிப்பது உறுதியானால், அந்த பஸ்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகள் தயங்க மாட்டார்களாம்..
போக்குவரத்து துறை கறார்
அதுமட்டுமல்ல, மக்களிடம் இருந்து அநியாயமாகப் பறிக்கப்பட்ட கூடுதல் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்கள் எந்தத் தடையுமின்றி ஊர் போய்ச் சேர வேண்டும் என்பதில் போக்குவரத்துத் துறை உறுதியாக இருக்கிறது.
இந்த அதிரடி சோதனைகள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சாமானிய மக்கள் நிம்மதியாகப் பயணம் செய்ய இது வழிவகுக்கும். எனவே, அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்குப் பயப்படாமல், மக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த வசதியைப் பயன்படுத்திப் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.!!












Click it and Unblock the Notifications