கோவையில் இருந்த சென்ற அரசு பஸ்ஸில் ஏராளமான தங்கம்.. மதிப்பு மட்டும் 8 கோடி.. இறுதியில் ட்விஸ்ட்
கோவை: கோவையில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்சில் ஆவணங்கள் இன்றி கடத்திய ரூ.8 கோடி தங்க கட்டிகளை அம்மாநில கலால் துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தங்கம் எப்படி வந்தது என்று விசாரணை நடந்து வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு கோவையில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகின்றன. கேரளா சார்பாகவும், தமிழ்நாடு சார்பாகவும் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. பாலக்காடு மட்டுமின்றி, கொச்சி, கொட்டாரக்கரை, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு உள்பட பல்வேறு நகரங்களுக்கும் கோவையில் இருந்து தினமும் பேருந்துகள் சென்று வருகின்றன. அப்படித்தான் கோவையில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

பொதுவாக கோவை மற்றும் பாலக்காடு இடையே உள்ள கேரளாவின் சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் சோதனை சாவடியில் நேற்று வாளையார் கலால் துறை (அமலாக்கம்) ஆய்வாளர்கள் ரமேஷ், பிரேமானந்தகுமார், உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீஜி, மனோகரன் மற்றும் கலால் துறையினர் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது கொட்டாரக்கரை நோக்கி சென்ற அந்த பஸ்சை கலால் துறையினர் நிறுத்தி சோதனை செய்தார்கள். பஸ்சில் இருந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் கலால் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் வைத்திருந்த உடைமைகளில் சோதனை செய்தார்கள். அதில் தங்க கட்டிகள் அதிகமாக இருந்தன. இதுகுறித்து கலால் துறையினர் விசாரணை நடத்தியதில், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது உறுதியானது.
விசாரணையில் அவர்கள் மும்பையை சேர்ந்த சங்கித் அஜய் ஜெயின் (வயது 28), ஹிதேஷ் சிவராம் சேலங்கி (23) ஆகியோர் என்பதும், ஆவணங்கள் இன்றி தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கலால் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்பிலான 8 கிலோ 696 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
8 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் வந்த பேருந்தை சரியாக கணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதை பார்க்கும் போது, ஏற்கனவே ரகசிய தகவல் கிடைத்தாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணைக்கு பின்னர் முழு விவரம் தெரியவரும். சென்னை வழியாக இந்த தங்கம் கோவைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications