சென்னையில் உரசி பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது!
சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ 38 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத அளவுக்கு பெரும் விலையேற்றத்தை கண்டுள்ளது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 25 ஆயிரம் என இருந்தது. இன்று அப்படியே 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

என்னதான் ஊரடங்கால் பொருளாதாரம் சரிவில் இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது, தற்போது திருமணம் நடத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ 37,736-க்கு விற்பனையானது. ஆனால் இன்று 544 ரூபாய் உயர்ந்து ரூ 38,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ 68 உயர்ந்து ரூ 4,785 க்கு விற்பனையாகிறது.
அது போல் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 65.70 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரு தினங்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 வரை அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றம் இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ளது. இது நகை வாங்குவோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஆடி மாதம் என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறாது என்பது ஒரு புறமிருந்தால் ஆடி முடிவதற்குள் இன்னும் எவ்வளவு விலை உயருமோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் ஆக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications