"ரூ.8500க்கு கூட போகலாம்.." தங்கம் விலை பறக்கும் நேரத்தில்.. இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே பலருக்கும் விருப்பமாக இருக்கும். ஆனால், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தே வருகிறது. டிரம்பின் வரியே இதற்குப் பிரதான காரணமாக இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் தங்கம் தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த மாதம் இறுதி வரை தங்கம் விலை சற்று நிலையாகவே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.9370க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை இப்போது தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், எப்போ தான் விலை குறையும் என்பதே மக்களின் பிரதான கேள்வியாக இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்ற இறக்கம் தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். மேலும், ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு கிராம் தங்கம் தேவைப்படும் என்பது குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது யூடியூப் பக்கத்தில் கூறுகையில், "தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 ஏறுவது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. தங்கம் கிராமுக்கு ரூ.4000 என இருந்தபோது ரூ.200 அதிகரித்தது என்றால் 5% உயர்ந்துள்ளது என அர்த்தம் அப்போது நீங்கள் கவலைப்படுவதில் லாஜிக் இருக்கிறது. இப்போது கிட்டதட்ட ரூ.10,000 வந்துவிட்டது. இப்போது ரூ.200 என்றால் அது வெறும் 2% தான். பங்குச்சந்தையிலும் கூட இதுபோன்ற ஏற்ற இறக்கம் இருக்கவே செய்யும்.
நம்மில் பெரும்பாலானோர் தங்கம் விலை இன்னும் ரூ.3000- 4000 என்ற ரேஞ்சிலேயே இருக்கிறது என்று நினைத்து வருகிறோம். ரூ.3000 இருந்தபோது ரூ.200 விழுந்தது என்றால் அது 8% சரிவு. ஆனால், இப்போது கிராமுக்கு ரூ.10,000 வந்துவிட்டது. இப்போது ரூ.200 என்பது வெறும் 2 சதவிகிதம் தான். இதில் பெரிய விஷயம் எதுவும் இல்லை.
இதுதான் நார்மல்
தங்கம் விலை ஏறிவிட்டது. முதலில் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாளை தங்கம் விலை ரூ. 12,000 போய்விட்டது என்றால் தினசரி கூட ரூ.200 ஏறி இறங்கும். இப்போதே பாகிஸ்தானில் போய் பாருங்கள். தினசரி 200- 300 ஏறி இறங்கும். அதுதான் நார்மல். இதை எல்லாம் சரிவு எனச் சொல்ல முடியாது.
ரூ.8,500க்கு கூட போகலாம்
இப்போது கூட எல்லாம் தங்கத்திற்கு எதிராக நடந்தால் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9000க்கு போகலாம்.. ரூ.8500க்கு கூடப் போகலாம்.. அதன் கீழ் போனால் மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும். அதுதான் பேஸ் என்ற நிலை வந்துவிட்டது என்று நம்பிவிட்டது. இப்போதைய சூழலில் எல்லாமே சரியாக நடந்தாலும் கூட தங்கம் விலை. அதிகபட்சம் ரூ.8500 வரை போகும். என்னை பொறுத்தவரை அதற்குக் கீழ் போக வாய்ப்பே இல்லை.
400 கிராம் தேவை
இதுபோல தங்கம் விலை அதிகரிக்கும் என்பதால் தான் அனைத்து குடும்பங்களும் 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்கிறேன். இப்போதும் கூட கோல் பீஸ் வாங்கலாம். கையில் இருக்கும் சில்லறைக்குக் கூட தங்கத்தை வாங்கி சேமிக்கலாம். அல்லது நம்பகமான கடையில் டிஜிட்டல் கோல்ட் வாங்கலாம்.. கையில் ரூ.2000 இருந்தால் அதைப் போடலாம்.. ரூ.10,000 வரை வந்த பிறகு அதை விற்றுவிட்டு நகையாக வாங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications