"இது" மட்டும் நடந்தால் போதும்.. தங்கம் விலை பட்டுனு சரியும்.. போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டில் தங்கம் விலை பட்ஜெட் சமயத்தில் இறக்குமதி வரி குறைப்பால் குறைந்தது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை மெல்ல அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே வரும் காலத்தில் மீண்டும் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். மேலும், இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எப்போதுமே தங்கம் தான் முதல் சேமிப்பு. சிறுக சிறுக பணத்தைச் சேமித்து மக்கள் வாங்குவது தங்கமாகவே இருக்கும். இதை நமது வீடுகளிலும் நாம் பார்த்து இருப்போம்.

விலைவாசி தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அதில் இருந்து தங்கள் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரிக்கவும் இதுவே காரணமாக இருக்கிறது.
தங்கம் முக்கியம்: பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் கூட தங்கத்தை வாங்க வேண்டும் என்றே தொடர்ந்து கூறி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தபட்சம் 200 கிராம் தங்கம் இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து. அப்போது தான் எதாவது ஒரு எமர்ஜென்சி என்றால் தங்கத்தை அடகு வைத்தோ வைத்து அல்லது விற்றோ சமாளிக்க முடியும். எங்குப் போனாலும் தங்கத்தை எளிதாகப் பணமாக மாற்ற முடியும் என்பதே இதற்குக் காரணமாகும்.

பட்ஜெட்: நமது நாட்டில் பட்ஜெட் சமயத்தில் இறக்குமதி வரியைக் குறைத்தார்கள். அப்போது தங்கம் விலை பெரியளவில் குறைந்தது. ஆனால், அதன் பிறகு மெல்ல அதிகரித்தே வருகிறது. நேற்றைய தினம் சென்னையில் 22 கேர்ட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,694க்கு விற்பனையானது. இது வரும் காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. தங்கம் வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றாலும் ஒரு விஷயம் மட்டும் நடந்தால் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் சமீபத்திய யூடியூப் வீடியோவில், "தங்கம் விலை வரும் நாட்களில் ஏற அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அது சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க 8 ஆண்டுகள் ஆகிவிட்ட தங்க முதலீட்டுப் பத்திரங்கள் இப்போது முதிர்வடைய ஆரம்பித்துள்ளது. கடந்த ஆக. 3ம் தேதி ரூ.6938 என்ற ரேட்டில் வாபஸ் வாங்கிக் கொள்வோம் என்றார்கள். ஆனால் இப்போது அது 7300 ரூபாயைத் தாண்டிவிட்டது (தங்கப் பத்திரத்தில் 24 கேரட் தங்கமே கணக்கிடப்படும்)
இது ஒரு பக்கம் இருக்க பட்ஜெட்டிற்கு முன்பு என்ன விலை இருந்தது பட்ஜெட் பிறகு என்ன ஆனது என்று ஒன்று இருக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகு மட்டும் சுமார் 5% வரை விலை குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் 300 முதல் 350 ரூபாய் வரை பட்ஜெட்டால் குறைந்துள்ளது.
மேலும் குறையும்: தங்கம் பத்திரம் முதிர்வடைய போகிறது என்பது தெரியும். இதன் காரணமாகவே இறக்குமதி வரியைக் குறைத்தார்கள் என்ற பேச்சும் இருக்கிறது. வரும் காலத்தில் இதை மேலும் குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இன்னும் இறக்குமதி வரி 6% வரை இருக்கிறது. அதைக் குறைத்தார்கள் என்றால் தங்கம் விலை மேலும் குறையக் கூட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
தங்கப் பத்திரங்கள்: தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு கடந்த 2015இல் இந்த தங்க பத்திரங்களை அறிமுகப்படுத்தியது. இதில் குறைந்தபட்சம் ஒரு கிராம் மதிப்புக்குத் தங்கப் பத்திரங்களை வாங்கலாம். இதன் விலை 24 கேரட் தங்கத்தை வைத்து மதிப்பிடப்படும்.. தங்கம் மதிப்பு உயரும் போது தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும் என்பது போல லிங்க் செய்தே இருக்கும். இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். இடையில் தேவை என்றால் வர்த்தகம் போல விற்றுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்டுக்கு இதற்கு 2.5% வட்டியும் மத்திய அரசு தருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications