மாஸ்டர் ப்ளான்.. ரெண்டே மாதத்தில் 1 கோடி உறுப்பினர் சேர்க்கை? கோதாவில் குதித்த திமுக.. மலைத்த அதிமுக
சென்னை: திமுக-வில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை, அந்த கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜுன் 3ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி திமுக பயணிக்க துவங்கி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கான களப்பணியில் தமிழக அரசியல் கட்சிகளும் இறங்கிவிட்டன.. மாறி மாறி ஆட்சி செய்யும், திராவிட கட்சியான திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டிகள் ஒவ்வொருமுறையும் வெளிப்படும்..
அந்தவகையில், தமிழகத்தை யார் கைப்பற்ற போவது என்ற போட்டி இந்த முறையும் கிளம்பி உள்ளது.. எனவே இரு தரப்பிலுமே கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது..

திண்ணை பிரச்சாரம்
இதில், திமுக கூட்டணியில், தற்போதுள்ள கூட்டணியே இனியும் தொடரும் என்றும், வேண்டுமானால் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. மிகப்பெரிய பலத்துடன் திகழ்வதுடன், மெகா கூட்டணியாகவும் திகழ்கிறது. ஒருபக்கம் கூட்டணி என்றாலும் மறுபக்கம், கட்சியை இன்னும் அதிகமாக பலப்படுத்தி கொள்ள முனைப்பு காட்ட துவங்கி உள்ளது. கடந்த 2 மாதங்களில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த அந்த பகுதியில் நடத்தப்பட்டும் வருகிறது. அத்துடன், சேர்க்கை முகாம்கள், தெருமுனைப் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளனர்.

துரைமுருகன்
சில நாட்களுக்கு முன்பு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த வழிகாட்டு நெறிமுறையில், "கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும், உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்தவேண்டும். உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25 ஆகும், உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.. அப்படி உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண், போட்டோ உள்ள முதல் பக்கத்தினை நகல் எடுத்து இணைக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடன்பிறப்பாய் இணைவோம்
அந்த, உறுப்பினர்களை சேர்க்கும் பணிதான் இன்று கையில் எடுக்கப்பட்டுள்ளது.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற திட்டத்தை முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரு.வி.க., குடியிருப்பில் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இன்று தொடங்கி ஜூன் 3ம் தேதி வரையிலும் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட உள்ளனர்.

திண்ணை பிரச்சாரம்
துண்டறிக்கை, திண்ணை பிரச்சாரங்கள் மற்றும் முகாம்கள் மூலமாக புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இரு கட்சிகளும் தங்களை மேலும் பலப்படுத்தும் புதிய நிர்வாகிகளை சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளது... திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற இந்த திட்டத்தில், திமுகவினர் ஆர்வமாக களமிறங்கி உள்ளனர்... திமுகவின் ஒவ்வொரு நிகழ்வையும், அதிமுக தரப்பும் உற்றுகவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications