ஐடி ரெய்டு... நல்ல விளம்பரம்... அமித்ஷாவை குறிவைத்து விமர்சிக்க இதுதான் காரணம்.. உதயநிதி பளீச்
சென்னை: திமுகவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் கட்சிக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதாகவும் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஒரு புறம் அரசியல் தலைவர்கள் பிரசாரங்களைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருமானவரித் துறையினர் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் வீடுகளில் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
வருவமான வரி துறை சோதனை
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் வீட்டில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இது திமுகவினர் மத்தியில் கடும்கொந்தள்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், ரூ 1.36 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் அதுவும் சபரீசனிடம் திருப்பி அளிக்கப்பதாகதாகவும் திமுக தரப்பில் கூறப்பட்டது.
நல்ல விளம்பரம்
இது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறுகையில். வருமானவரித் துறையினரின் சோதனை திமுகவிற்கு இலவச விளம்பரமாக அமைந்துள்ளதாகவும் இது திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியும் உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் தன்னை பற்றிப் பேசியதாலேயே அதற்குப் பதிலடி கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
குடும்ப அரசியலா
கடந்த வாரம் தாராபுரத்தில் பேசிய பிரதமர் மோடி, உதயநிதியை பட்டத்து இளவரசர் என்றும் திமுக குடும்ப அரசியலைச் செய்வதாகவும் குறிப்பிட்டார். இது குறித்து உதயநிதி கூறுகையில், நான் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறேன். இங்குள்ள வாக்காளர்களை இது குறித்து முடிவு செய்யட்டும். சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று உதயநிதி கூறினார்.
ஒற்றை செங்கல்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதிலும் கடைசியாக சில வாரங்கள் அவர் மத்திய அரசையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மதுரையில் பாஜக அரசைக் கட்டிய எய்ம்ஸை கையோடு எடுத்து வந்துவிட்டதாகச் செங்கல்லை காட்டி விமர்சித்தார். மேலும், கிரிக்கெட் ஆட தெரியாத அமித்ஷா மகன் கிரிக்கெட் வாரித தலைவர் ஆனது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.