பிரபல ரவுடியும் பாஜக நிர்வாகியுமான படைப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. பின்னணி என்ன
சென்னை: படப்பை குணா மிரட்டல் புகாரில் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரமங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என். குணசேகரன். படப்பை குணா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன அதிகாரிகளை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது இருக்கிறது.

இதேபோல் படப்பை குணா மீது 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் இருக்கிறது. படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். அவர் பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் படப்பை குணாவும் பாஜகவில் இணைந்தார்.
அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பும் வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ். பாபு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார். படப்பை குணாவுக்கு பாஜகவில் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், கடந்த 4ம் தேதி படப்பை குணாவை போலீசார் கைது செய்தனர்.
சுங்குவார்சத்திரம் அருகே பிள்ளைச் சத்திரம் பகுதியில் இரும்பு கடை நடத்தி வரும் நபரை மிரட்டி ரூ. 10 ஆயிரம் பணம் பறித்த வழக்கில் படப்பை குணா கைது செய்யப்பட்டார். பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள படப்பை குணா, தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதன்படி, படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications