சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகின்றனராம் எம்.பி.க்கள்.. அமைச்சர் பதவிக்கு குறி!
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக படுதீவிரமாக ஆலோசித்து வருகின்றனராம். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சராகிவிடலாம் என்ற இலக்கோடுதான் இந்த ஆலோசனை நடத்தப்படுகிறதாம்.
தமிழகத்தைச் சேர்ந்த லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் பெரும்பாலும் சீனியர்கள்தான். அந்த கட்சி இந்த கட்சி என்றில்லாமல் இவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி இல்லாதது பெரும் புலம்பலாக இருந்து வருகிறது.
இதனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் ஆட்சிக்கு வந்துவிட்டால் அட்லீஸ்ட் மாநில அமைச்சராகிவிடலாமே என கனவு காண்கின்றனராம். இதனால்தான் தமது ஆதரவாளர்களுடன் படுதீவிரமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி விவாதிக்கின்றனராம்.
ஒருசில எம்.பி.க்கள் சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுகிறேன்... அதற்காக எம்.பி. பதவியையே ராஜினாமா செய்தும் விடுவேன் என சக எம்.பி.க்களிடம் அசால்ட்டாகவும் கூறி வருகின்றனராம். அதேநேரத்தில் தங்களது கட்சி தலைமையிடம் முதலில் சீட்டுக்கும் அமைச்சர் பதவிக்கும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர்தான் முடிவெடுப்போம் எனவும் சிலர் தயங்கியும் வருகின்றனராம்.
இப்படி மாநில அமைச்சர் பதவிக்காக எம்பி பதவியை விட்டுக் கொடுக்கும் பிரமுகர்கள் யார்? யார்? என்பதுதான் தமிழக கட்சி நிர்வாகிகளிடையே நடந்து வரும் ஹாட் விவாதமாகவும் இருக்கிறது. இருப்பினும் கட்சிகளின் தலைமைகள் என்ன முடிவெடுக்கும்? அப்படி சரி போட்டியிடுங்கள் என தலைமைகள் முடிவெடுத்தால் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும் புயலையும் கூட கிளப்பலாம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.