அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பொன்னேரி அருகே அலறி அடித்து ஓடிய பயணிகள்!
சென்னை: பொன்னேரி அருகே மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அந்தரத்தில் அரசுப் பேருந்து தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் T40 இன்று காலை வழக்கம்போல் மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தது.

நேற்று இரவு முதல் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இந்த நிலையில் அரசுப் பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி ஒரு சக்கரம் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது.
இதனால் பேருந்தில் இருந்த 8 பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோர் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். பேருந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் சிக்கி ஒரு சக்கரத்தின் ஒருபுறம் வயல்வெளியில், மறுபுறம் சாலையிலும் என அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் விழுப்புரம் கோட்டம் போக்குவரத்து பொன்னேரி பணிமனை அதிகாரிகள் அங்கு சென்று அந்தரத்தில் தொங்கும் பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காலையிலேயே பெய்த மழை காரணமாக அந்த பேருந்தில் அதிக பயணிகள் பயணம் செய்யாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குறைவான பயணிகளே இருந்ததால் பயணிகள் விரைவாக பின்னால் இறங்கி தப்பினர்.












Click it and Unblock the Notifications