அரசாங்க அலுவலகங்களில் ஜிபே மூலம் பாயும் பணம், கொட்டும் பரிசு மழை, வசூல் வேட்டையில் ஊழியர்கள்? ஏன்
சென்னை: தீபாவளி நெருங்கிவிட்டது.. பொதுவாக, இதுபோன்ற தீபாவளி நேரங்களில் அரசு அலுவலகங்களில் வசூல் நடப்பது வாடிக்கையாகும்.. இதற்கான வசூல், அரசு அலுவலகங்களில் களைகட்டி வருகிறது. இந்த வசூலை தடுத்து நிறுத்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. மற்றொருபக்கம், சில அரசு அலுவலகங்களில் வசூலை அதிகாரிகள் தடுக்கவில்லை என்றும் புகார்கள் கிளம்பியிருக்கின்றன.
பண்டிகை காலங்களில், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை, ஒப்பந்ததாரர்கள், அரசியல் பிரமுகர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.. மேலும், தங்களிடம் வரும் பொதுமக்களிடம், பண்டிகை கால செலவிற்கு லஞ்சம் பெறுவதையும், சில துறை அதிகாரிகள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

எனவேதான், ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்காணிப்புகளை துவங்கி விடுவார்கள்.
அரசு அலுவலகங்கள்
தீயணைப்புத் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், தொழில்துறை சார்ந்த அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்பட சுமார் 20 துறைகளில் இதுபோன்ற கண்காணிப்புகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணிப்பார்கள்.
அந்தவகையில் இந்த வருடமும் அரசு துறைகளைச் சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூல் வேட்டை நடப்பதாக புகார்கள் முளைத்தன.. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக செயல்படும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலதிபர்கள்
இதன்மூலம் மொத்தம் 38 மாவட்டங்களிலும், அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.. 38 தனிப்படைகள் இதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளன.. இதைத்தவிர தங்களுக்கு வரும் ரகசிய தகவல்களின் அடிப்படையிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபடவும் முனைப்பு காட்டி வருகிறார்கள்..
அதுமட்டுமல்லாமல், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.. அத்துடன், தொழிலதிபர்கள், வியாபாரிகள் யாராவது பரிசு பொருட்களை சட்டவிரோதமாக வழங்குகிறார்களா? என்பதையும் ரகசியமாக கண்காணிக்க துவங்கியிருக்கிறார்கள்.
ஜிபே மூலம் பணம்
இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி விருதுநகரில் கடைகள், நிறுவனங்களில் தீயணைப்புத் துறையினர் நோட்டு போட்டு வசூல் செய்ததாக புகார் கிளம்பியது..
உடனே லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் ஹரிச்சந்திரன், நவநீதகிருஷ்ணன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரூ.4.94 லட்சம் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. ரூ. 59,500 பறிமுதல் செய்யப்பட்டதுடன், வினோத் என்பவரின் அக்கவுண்ட்டில் ரூ. 3.79 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதும், ஜிபே, போன் பே மூலம் வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
முளைத்த புகார்கள்
இப்படித்தான் கடந்த வருடம் லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.. அதற்கு முன்பு ஒரு கோடியை தாண்டிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.. இந்த முறை வசூல் பணம் கடந்த காலத்தைவிட அதிகரிக்கும் என்கிறார்கள்.
எனினும் சில இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தாமல், மவுனம் காப்பதாக புகார்கள் முளைத்துள்ளன.. விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், லஞ்சம் தொடர்பான பிரச்னைகள் வெளியே தெரியாமல் இருக்க, லஞ்ச ஒழிப்பு துறையினர் அடக்கி வாசித்து வருவதாகவும் சலசலப்புகள் எழுந்துள்ளன. எனவே பாரபட்சமின்றி அனைத்து இடங்களிலும் கண்காணிப்புகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications