சம்பளம் ஏறுதா? நீண்ட கால ஆசை நிறைவேறுமா? பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தினகரன்
சென்னை: ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை திமுக அரசு உருவாக்கியுள்ளதாகவும், நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அவர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.5 ஆயிரம், பிறகு ரூ.7500 என்று ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.

பணி நிரந்தரம்: எனினும், கடந்த 10 வருடங்களாகவே தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் கேட்டு அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, பகுதி நேர ஆசிரியர்களுக்கு மேலும் ஊதியம் உயர்த்தி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்தது. மேலும் ஊதியம் உயர்வு மற்றும் பணி நிரந்தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது.
எனினும் ஊதிய உயர்வு கோரியும், பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள். நேற்றுகூட, சுமார் 500க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே குவிந்தனர். பிறகு கோட்டை நோக்கி முற்றுகையில் ஈடுபட புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
டிடிவி தினகரன்: இதே கோரிக்கையைதான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தற்போது வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிநிரந்தரம் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாபெரும் துரோகம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வாக்குறுதியளித்த மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்-அமைச்சரான மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம்.
பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, முதல்-அமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.
தமிழக அரசு: எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications