என்எல்சி விவகாரம்: பரவனாறு மாற்றுப்பாதை திட்டம் முக்கியமானது.. தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை: என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம், வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களில் புகுந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாரும் காயம் அடைந்தனர்.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே, என்.எல்.சி முற்றுகை போராட்டத்தின் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது. அதை செய்தால்தான் மற்ற பணிகளை செய்ய முடியும். பிரச்சினை குறித்து என்.எல்.சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது. என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது கண்டிக்கத்தக்கது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனநாயக ரீதியிலான அமைதி போராட்டம் என்பதாலேயே போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இடம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டது. போன டிசம்பர் மாதமே பயிர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு உள்ளாக முடிய வேண்டிய பணி.. இப்போதும் முடியவில்லை. பயிர் இருக்கிற காரணத்தால் அதற்கும் இழப்பீடு தொகை கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
நில உரிமையாளர்களுக்கு ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழஙகப்பட உள்ளது. பரவனாறு பணி மேற்கொள்ளவில்லை என்றால் சுரங்க பணிகள் பாதிக்கப்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்ற கிரிட்டிக்கல் ஸ்டேஜ் வந்த பிறகுதான் இந்த சூழ்நிலை அன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.












Click it and Unblock the Notifications