சவுக்கு சங்கருக்கு கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம்.. தாக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர் பரபரப்பு வாதம்
சென்னை: சவுக்கு சங்கருக்கு சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிடும் போது தெரிவித்தார்.
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசாரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ந் தேதி கோவை போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். தாராபுரம் சாலையில் வந்த போது, மெதுவாக சாலையில் திரும்ப முயன்ற போலீஸ் வேன் மீது கார் மோதியது. இந்த விபத்தில் சவுக்கு சங்கர் மற்றும் 2 போலீசார் காயம் அடைந்தனர். சிகிச்சைக்கு பின்னர் சவுக்குசங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சவுக்கு சங்கர் கோவை சிறையில் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதில் அவருடைய கையில் காயம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சவுக்கு சங்கர் சார்பில் அவருடைய வக்கீல் கோபாலகிருஷ்ணன் கோவை 4-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சரவணபாபு, சட்டப் பணிகள் ஆணைக்குழு கோவை சிறைக்கு நேரில் சென்று சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார்
இதைத்தொடர்ந்து சட்டப்பணிகள் ஆணைக்குழுவை சேர்ந்த வக்கீல் சண்முகவேல் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் கடந்த மே 7ம் தேதி காலை 11.15 மணிக்கு கோவை மத்திய சிறைக்கு சென்று சவுக்கு சங்கரிடம் விசாரித்தனர்.அப்போது காயங்களின் தன்மை குறித்து ஆய்வு செய்ய மருத்துவர்களும் உடன் சென்று இருந்தனர். அவர்கள் அன்று பிற்பகல் 1 மணிவரை சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திவிட்டு கோவை சிறையில் இருந்து வெளியே வந்தார்கள்.
அன்று இரவே கோவையில் சவுக்கு சங்கரின் வக்கீல் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, "நீதிமன்ற உத்தரவின்பேரில் சட்ட பணிகள் ஆணைக்குழு கோவை மத்திய சிறைக்கு சென்று சவுக்கு சங்கரை சந்தித்து விசாரணை நடத்தியது. நானும் அவரை சந்தித்தேன். அவரின் கையில் அடிபட்டிருக்கிறது. அத்துடன் கொப்புளங்கள் வந்து உள்ளன. ஆனால் அதற்கு இதுவரை சிகிச்சை தரப்படவில்லை. ஆனால் சவுக்குசங்கர் தாக்கப்படவில்லை என்று சிறைத் துறை நிர்வாகம் அறிவித்து உள்ளது பொய் ஆகும்.
நாங்கள் கேட்பது, அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.
இதனிடையே யூடியூபர் சவுக்கு சங்கர் வழக்கறிஞரின் குற்றச்சாட்டு அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாய் கமலா, ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி வாதிடுகையில், 'கோவை சிறையில் அடைக்கப்படும் முன்பு, சவுக்கு சங்கர் காயமடையவில்லை. அவரை பரிசோதித்த டாக்டரும் அவர் காயம் அடையவில்லை என்றுதான் சான்றிதழ் அளித்துள்ளார். சிறைக்குள் சென்ற பிறகுதான் காயமடைந்துள்ளார்' என்றார்.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ்திலக் ஆஜராகி, 'சவுக்கு சங்கரை தேனியில் கைது செய்து வாகனத்தில் அழைத்து வந்தபோது நடந்த விபத்தில், அவர் மட்டுமல்லாமல் போலீசாரும் காயம் அடைந்துள்ளனர்.
சவுக்கு சங்கருக்கு இடது கை, வலது கால்பாதம், உதடு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. அதனால், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத்துறை டாக்டரும், அவரை பரிசோதித்து சான்று அளித்துள்ளார்' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, சிறைத்துறையினர் தாக்கியதாக குற்றம் சாட்டி கோவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது,
சட்டப் பணிகள் ஆணைக்குழு நியமித்த 3 வக்கீல்கள் மற்றும் ஒரு எலும்பு சிகிச்சை நிபுணர் அடங்கிய குழு, ஒரு மணி நேரத்துக்கும் மேல் சங்கரிடம் விசாரணை நடத்தினார்கள் என்றும் அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, 'மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்கள். இதன்பேரில் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications