மூடுவது எல்லாமே டாஸ்மாக்கின் கஜானா கடைகள்.. அரசு ஊழியர்களாக மாற்றமா.. விஜய்க்கு இரண்டு சிக்கல்கள்
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற கையில், மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள 255 டாஸ்மாக் கடைகள் இன்னும் 15 நாளில் மூடப்பட உள்ளது. இந்த சூழலில் அதில் பணியாற்றியவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
அரசு மூடிய குறிப்பிட்ட 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் தான் டாஸ்மாக்கின் கஜானா போனால் செயல்பட்ட அதிக வருவாய் கடைகள்.. அதனை உடனடியாக மூட உத்தரவிட்டதால் வருமானத்திற்கும் சிக்கல் வரும் எனகிறார்கள்.

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 கடைகள் இயங்குகின்றன. இதில் பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மிக அருகில் உள்ள கடைகள் எண்ணிக்கை மட்டும் 717 ஆகும். இந்த 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆட்சிக்கு வந்த போது 500கடைகளை மூடினார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் 500 கடைகளை மூடினார். அந்த வரிசையில், 717 கடைகளை முதல்வர் விஜய் மூட உத்தரவிட்டுள்ளார் . கடந்த திமுக ஆட்சியிலும் 500 மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இருப்பினும் அந்தக் கடைகளில் வேலை பார்த்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல் வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் இப்போதும் அதே மாதிரி மூடப்பட உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு கடைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துத்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு கடையிலும் சூப்பர்வைசர் மற்றும் 2 சேல்ஸ்மேன்கள் உட்பட குறைந்தது 5 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். 717 கடைகள் என்றால் கிட்டத்தட்ட 3,585 பணியாளர்களை வேறு கடைகளுக்கு மாற்ற வேண்டும். இது சவாலானது என்கிறார்கள்
இதனிடையே டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் திருச்செல்வன் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மாநிலம் முழுவதும் 4765 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல் 1000-க்கும் மேற்பட்ட எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களும் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் இயங்கி வரும் 717 கடைகள் அடையாளம் காணப்பட்டு இரண்டு வார காலத்திற்குள் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதை சமூகப் பொறுப்புள்ள தொழிற்சங்கம் என்கிற முறையில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வரவேற்கிறது.
அதே நேரத்தில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் அடையாளம் காண்பதில் டாஸ்மாக் அதிகாரிகள் கள ஆய்வு செய்வதில் போதிய அக்கறை செலுத்தாமல் அவசரகதியில் பட்டியல் தயாரித்துள்ளதாக தெரிய வருகிறது. இதில் அரசுக்கு சொந்தமான மதுபான டாஸ்மாக் கடைகளுக்கு இணையாக மது சில்லறை விற்பனை செய்து வரும் தனியார் எப்.எல்.2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மூடப்பட வேண்டிய பட்டியலில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பக்கத்து கட்டிடத்தில், அருகாமையில் இயங்கி வரும் மனமகிழ் மன்றங்கள் கள ஆய்வு செய்யப்படவில்லை.
அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதின் மூலம் இந்த தனியார் மனமகிழ் மன்ற மதுக்கடைகளில் அதிக குடிமக்கள் குவியவே வழிவகுக்கும் நிலைமையே ஏற்படுமே தவிர அரசின் நோக்கம் முழுமையாக நிறைவேறாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் மூடப்படும் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டாஸ்மாக் அதிகாரிகள் இன்றிலிருந்தே டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது ஊழியர்களிடையே வேலை குறித்தான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் நீதிமன்ற உத்தரவுகள், அரசின் கொள்கை முடிவு அடிப்படையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் நிரந்தர பணியிடங்களிலும், கூட்டுறவு துறையிலும் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது போல தற்போது முடிவடைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் 3000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது கல்வி தகுதிக்கேற்ப அரசின் இதர துறைகளில் நிரந்தர மாற்றுப்பணி வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வேண்டுகோள் விடுக்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், தற்போது மூடப்படும் கடைகள் அனைத்தும் அதிக வருமானம் ஈட்டும் கடைகளாகும். குறிப்பாக பேருந்து நிலையங்களுக்கு அருகே உள்ள கடைகள் அதிக வருமானத்தை ஈட்டி வந்தவை. மேலும் இந்த கடைகளை மூடுவதன் மூலமாக வரும் வருமான இழப்பை முதல்வர் விஜய் எப்படி சமாளிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications