தனியார் மருத்துவமனைகளில் 50% கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்குங்கள் - தமிழக அரசு அரசாணை
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர 578 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 % படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்திலுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள 578 தனியார் மருத்துவமனைகளும், மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை சுனாமியாக வீசி வருகிறது. தமிழகத்திலும் நாளொன்றுக்கு 18 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தினசரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இந்த தட்டுப்பாட்டை போக்க தனியார் மையங்கள், வர்த்தக மையங்கள் உள்ளிட்டவை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 50 % படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்குமாறு சுகாதாரத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவசரம் இல்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு உள்நோயாளிகளாக அனுமதிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் நடைமுறைகளை அனைத்து மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், படுக்கை வசதிகள் குறித்து தினசரி அறிக்கையை அந்ததந்த மாவட்டத்தில் உள்ள இணை சுகாதாரத் துறை இயக்குநரகத்திலோ அல்லது சென்னையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்திலோ தெரிவிக்க வேண்டும்.
கொரோனா சுனாமியில் சிக்கித்தவிக்கும் இந்தியா-நிமிடத்திற்கு 2 மரணங்கள், வினாடிக்கு 4 புதிய தொற்றுக்கள்
மேலும் https://stopcorona.tn.gov.in/ என்ற இணையப் பக்கத்திலும் தேவையான தகவல்களை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தினமும் பதிவேற்றம் செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சைகள் குறித்து தனியார் மருத்துவமனைகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட இணை சுகாதாரத் துறை இயக்குநர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்திலுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள 578 தனியார் மருத்துவமனைகளும், மொத்த படுக்கைகளில் 50 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்ஸிஜன் வசதியுடைய படுக்கைகள், ஐ.சி.யு.,வார்டுகள் உள்ளிட்டவை தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீதம் வரை ஒதுக்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டு விதிமுறைகளை இத்தனியார் மருத்துவமனைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.